யுவராஜ் சிங் மாதிரி இவரும் 2020 ஐபிஎல்-ல ஆட முடியாது.. வயதான வீரருக்கு தடை.. பிசிசிஐ அதிரடி!
மும்பை : பிரவீன் தாம்பே என்ற 48 வயது வீரர் 2020 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
ஆனால், விதிப்படி அவர் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது எனவும், அதனால், பிசிசிஐ அவரை விளையாட அனுமதிக்காது எனவும் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அனுமதிக்க வாய்ப்பில்லை
அதற்கு காரணமான அதே விதியால் தான் யுவராஜ் சிங்கும் 2020 ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என கூறப்படுகிறது. யுவராஜ் சிங்கையே பிசிசிஐ ஐபிஎல்-இல் அனுமதிக்காத போது, பிரவீனையும் விளையாட அனுமதிக்காது என கூறப்படுகிறது.

என்ன விதி?
பிசிசிஐ விதிப்படி இந்திய வீரர்கள் ஒன்று ஐபிஎல் தொடரில் ஆடலாம் அல்லது இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி மற்ற நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கலாம்.

யுவராஜ் சிங் என்ன செய்தார்?
கடந்த 2019ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் கனடா நாட்டு டி20 தொடர் மற்றும் அபுதாபியில் நடைபெற்ற டி10 தொடர்களில் பங்கேற்று விளையாடினார். அந்த டி10 தொடரில் அவரது மராத்தா அரேபியன்ஸ் அணி கோப்பையை கூட வென்றது.

ஓய்வு முடிவு
யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஐபிஎல்-இல் ஆடிய பின் உலகக்கோப்பை தொடர் நடந்து வந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், ஐபிஎல்-இல் இருந்தும் தன் ஓய்வை அறிவித்தார். அதன் பின்னரே, அவர் கனடா நாட்டு டி20 தொடர் மற்றும் அபுதாபி டி10 தொடரில் பங்கேற்றார்.

பிசிசிஐ அனுமதி
யுவராஜ் சிங் ஓய்வுக்குப் பின் தான் பிசிசிஐ அவருக்கு அந்த தொடர்களில் பங்கேற்க அனுமதி அளித்தது. அதனால், யுவராஜ் சிங் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது.

பிரவீன் தாம்பே நிலை
48 வயதான பிரவீன் தாம்பேவும் அபுதாபி டி10 தொடரில் 2018ஆம் ஆண்டு பங்கேற்றுள்ளார். அவர் மிக அதிக வயதான வீரர் என்பதால் அவர் மீது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருப்பதால், அவருக்கு அந்த தொடரில் வரவேற்பு கிடைத்தது.

ஹாட்ரிக் சாதனை
மேலும், டி10 போட்டிகளில் முதல் ஹாட்ரிக் எடுத்த வீரரும் அவர் தான். ஒரே டி10 போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளரும் அவர் தான். இந்த நிலையில், 2020 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.

அனுமதி கிடைக்காது
இந்த நிலையில், அவர் அபுதாபி டி10 தொடரில் பங்கேற்றது அவருக்கு வினையாக மாறியுள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிரவீன் தாம்பே வெளிநாட்டு தொடரில் ஆடியதால், விதிப்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என கூறி உள்ளார்.

ஏலத்தில் அனுமதித்தது ஏன்?
பிரவீன் தாம்பே விதிப்படி பங்கேற்க முடியாது என இப்போது கூறும் பிசிசிஐ அதிகாரிகள், அவரை எப்படி 2௦20 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முடிவுக்கு வந்த சாதனை
ஐபிஎல் தொடரில் ஆடிய மிக அதிக வயதான வீரர் என்ற சாதனையை செய்தவர் பிரவீன். அவர் 2013 ஐபிஎல் தொடரில் தன் 41 வயதில் தான் ஐபிஎல்-இல் அறிமுகம் ஆனார். 33 போட்டிகளில் 28 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். அவருடைய ஐபிஎல் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications