ஆர்சிபி அணி தோல்வி
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ஓப்பனிங்கை தவிர வேறு எந்த வீரரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக பட்டிக்கல் 21 ரன்கள் மற்றும் கோலி 39 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி சீரான வேகத்தில் ரன் உயர்த்தியது. இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
புதிய சர்ச்சை
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது விராட் கோலி மற்றும் கள நடுவர் விரேந்தர் ஷர்மா வாக்குவாதம் நடத்திய சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபிக்கு அணிக்கு தொடர்ந்து 3 முறை தவறான முடிவினை அவர் கொடுத்தார். பின்னர் அதனை டிஆர்எஸ் முறையில் ஆய்வு செய்து ஆர்சிபி நியாயமான முடிவை பெற்றது.
கோலியை கடுப்பாக்கிய நடுவர்
ஆர்சிபி பேட்டிங் செய்துக்கொண்டிருந்த போது ஆட்டத்தின் 16வது ஓவரில் சபாஷ் அகமது எல்.பி.டபள்யூ ஆனார். பந்து பேடில் தான் முதலில் பட்டது என பேட்ஸ்மேன் உறுதியாக கூறிய போதும் அவுட் கொடுக்கப்பட்டது. பின்னர் ரிவ்யூவ் எடுக்கப்பட்டதில் நாட் அவுட் என தெரியவந்தது. இதன் பின்னர் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஹர்ஷல் படேல், எட்ஜாகி கீப்பர் கேட்ச் கொடுத்ததாக நடுவர் விரேந்தர் ஷர்மா அவுட் என அறிவித்தார். ஆனால் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டதில் நாட் அவுட் என தெரியவந்தது.
3வது தவறான முடிவு
விரேந்தர் ஷர்மாவின் இந்த 2 தவறான முடிவினால் ஆர்சிபி அணிக்கு 2 ரன்கள் கொடுக்கப்படாமல் போனது. பேட்டிங்கின் போதுதான் தவறு நடந்துவிட்டது என்று பார்த்தால், ஆர்சிபி அணி பவுலிங் செய்த போதும் விரேந்தர் ஷர்மா தவறான முடிவை கொடுத்தார். ஆட்டத்தின் 7வது ஓவரில் யுவேந்திர சாஹல் வீசிய பந்தில் கேகேஆர் வீரர் ராகுல் திரிபாதி எல்.பி.டபள்யூ ஆனார். ஆனால் அதற்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது.
ஆத்திரத்தில் கோலி
இதனால் ஆத்திரமடைந்த விராட் கோலி, நடுவரிடம் நேரடியாக சென்று கடும் ஆக்ரோஷத்துடன் வாக்குவாதம் செய்தார். மேலும் கையில் இருந்த பந்தை வேகமாக கீழே எறிந்து தனது எதிர்ப்பை காட்டினார். வாக்குவாதம் முற்றும் நிலைக்கு சென்ற போது, ஸ்கொயர் லெக் நடுவர் கிறிஸ் கஃபனே சென்று கோலியை சமாதானப்படுத்தி விளக்கினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. நிச்சயம் கோலிக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிகிறது.