ஐபிஎல் போட்டி
இந்த போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவெடுக்க பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் துபாய் சென்றனர். அதில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடித்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டங்கள் போடப்பட்டு வரும் நிலையில் இந்த வாரத்தில் 3 முக்கிய விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து பிசிசிஐ-க்கு ஜூன் 28ம் தேதி வரை ஐசிசி அமைப்பு கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்த தொடரை இந்தியாவை விட்டு வெளியில் நடத்தும் முடிவுக்கு பிசிசிஐ-ம் வந்துவிட்டது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரை அக்டோபர் 17ம் தேதி முதல் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐபிஎல் முடிந்த அடுத்த 2 நாட்களில் உலகக்கோப்பையாகும்.
முக்கிய கேள்விகள்
பிசிசிஐ தான் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் என்பதால் அனைத்து நாட்டு வீரர்களையும் ஒரே நேரத்தில் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை என பிரித்து பபுள் ஏற்படுத்த முடியுமா? டி20 உலகக்கோப்பை உடனடியாக தொடங்கவுள்ள நிலையில் அயல்நாடுகள் தங்களது வீரர்களை ஐபிஎல் தொடருக்கு ரிஸ்க் எடுத்து அனுப்புமா? ஐபிஎல் போன்ற அதிரடி டி20 தொடர் நடைபெற்ற பிறகு டி20 உலகக்கோப்பைக்கு பிட்ச் உடனடியாக எப்படி தயாராக இருக்கும்?
விமானங்கள் ரத்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 13 நாடுகளில் இருந்து விமானங்கள் வர அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் அனைத்தையும் அழைத்து செல்லும் வகையில் பெரிய அளவிலான விமான புக்கிங்கள் சாத்தியமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
ஒரே ஒரு நல்ல விஷயம்
பிசிசிஐ-க்கு இந்த வாரத்தில் கிடைத்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நியூசிலாந்து வீரர்களின் அறிவிப்பு தான். ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயாராக இருப்பதாக அணி நிர்வாகத்திற்கு நியூசிலாந்து வீரர்கள் உறுதியளித்துள்ளனர். எனினும் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் நாடுகளின் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.