வீரர்கள் வருகை
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை - இந்தியன்ஸ் அணி மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இதுவரை ஒரு முறைகூட கோப்பை வெல்லாத பெங்களுரு அணி இந்த முறை எப்படியாவது சாம்பியனாக வேண்டும் என்ற முடிவுடன் வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்ற போதும் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. எனவே அணியில் பல மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.
ஏலம்
பெங்களூர் அணியில் ஏற்கனவே பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாகும். அதற்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் டான் கிறிஸ்டியனை ரூ.4.8 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது. இவர் கிறிஸ் மோரிஸுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல மற்றொரு ஆஸ்திரேலிய விரர் க்ளென் மேக்ஸ்வெல்லும் அணிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
நம்பிக்கை
இந்நிலையில் ஆர்.சி.பி அணியில் ஆடுவது குறித்து பேசியுள்ள டான் கிறிஸ்டியன், அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸுடன் சேர்ந்து ஆடவிருப்பது உற்சாகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல மற்றொரு புறம் சொந்த நாட்டு வீரர் மேக்ஸ்வெல்லும் அணியில் இருப்பதால் சிறப்பாக இருக்க போகிறது என தெரிவித்தார்.
சாம்பியன்
மேலும் அவர், இந்த முறை நிச்சயமாக ஐபிஎல் கோப்பையை வெல்வோம். கோப்பையை வெல்ல எங்களால் முடியும். அதனை அடைய நான் அணிக்கு மிக உதவியாக இருப்பேன். வரும் ஐபிஎல் போட்டியை மிகவும் எதிர்நோக்கி உள்ளேன் என டான் கிறிஸ்டியன் தெரிவித்தார்.