காயம்
டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இடதுகையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் 3 - 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் வரும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார்.
நீடித்த குழப்பம்
ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததால் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என குழப்பம் ஏற்பட்டது. இந்த ரேசில் ஸ்டீவ் ஸ்மித், அஸ்வின், ரிஷப் பண்ட்-ன் பெயர்கள் இருந்தன. இறுதியில் ரிஷப் பண்ட் தான் டெல்லி அணியின் கேப்டன் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நெகிழ்ச்சி
இந்நிலையில் இதுகுறித்து பேசி ரிஷப் பண்ட் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பதவி கொடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நன்றி எனவும் தினமும் எனது 100% முயற்சியை வழங்குவேன். இந்த வருடம் கோப்பையை வெல்வோம் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
|
சவால்
ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் சிறபாக செயல்பட்டார். எனவே ஐபிஎல் போட்டியிலும் ஒரு கேப்டனாக அதிரடியை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவருக்கு முதல் போட்டியிலேயே சவால் உள்ளது. ஏனென்றால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்தாண்டு தனத முதல் போட்டியாக ஏப்.10ம் தேதி அனுபவம் நிறைந்த வீரர்கள் இருக்கும் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.