அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சஞ்சு சாம்சன் எடுத்த இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா,
தாங்களும் முதலில் பந்துவீச தான் நினைத்தோம் என்று சிரித்தார். இதனையடுத்து, முதலில் ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் ஜெய்ஷ்வால், பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.
ஜெய்ஷ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தாலும், 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். சாம்சன் 14 ரன்கள், படிக்கல் 2 ரன்கள் எடுத்து வெளியேறினர். இருப்பினும் மறு முனையில் பட்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் பட்லர் தெனது அதிரடி ஆட்டத்தை ஆட முடியாத நிலை ஏற்பட்டது. பட்லர் 35 பந்துகளில் 39 ரன்கள் விளாசினார். எனினும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸ் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் வார்னரை பட்லர் முந்தினார்.
மேலும் ஒரு சீசனில் 850 ரன்களை கடந்த 2வது வீரர் என்ற பெருமையையும் பட்லர் படைத்தார். எனினும் 5வது சதத்தை அடித்து கோலியின் ரெக்காடை முறியடிக்கும் வாய்ப்பு பட்லருக்கு வீணானது. இந்தப் போட்டியில் பவுண்டரிகள் அடித்ததன் மூலம், நடப்பு சீசனில் 2000 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது.