மிஸ்டரி பௌலர்
தற்போது சென்னையில் வசித்து வரும் 27 வயதான வருண் சக்கரவர்த்தி தமிழ்நாடு பிரீமியர் லீகில் கலக்கிய சுழற்பந்துவீச்சாளர். இவர் மிஸ்டரி பந்துவீச்சாளர் என்ற அடையாளத்துடன் வலம் வருகிறார். ஆஃப் ஸ்பின் - லெக் கட்டர் இரண்டையும் சேர்த்தது போன்ற ஒரு வித்தியாசமான பந்துவீச்சை கொண்டு, அடுத்த பந்து எந்த திசையில் திரும்பும் என புரியாத வகையில் பந்து வீசுவது இவரது சிறப்பு.
பஞ்சாப் வாங்கியது
ஐபிஎல் ஏலத்தில் ஐந்து அணிகள் இவரை வாங்க போட்டி போட்டன. தமிழக வீரரான இவரை சென்னை அணி வாங்க போராடியது. எனினும், கையிருப்பை விட வருணின் விலை எகிறியதால் ஏலம் கேட்பதை நிறுத்தியது. இறுதியில் பஞ்சாப் அணி 8.40 கோடிக்கு அவரை வாங்கியது.
எதிர்பார்க்கவில்லை
வருண் இது பற்றி கூறிய போது, தன் அடிப்படை விலை 20 லட்சத்துக்கு தான் தன்னை ஏலம் எடுப்பார்கள் என தான் நினைத்ததாக கூறினார். 8.40 கோடிக்கு ஏலம் எடுத்த பின் தான் நிலவில் மிதப்பதை போல உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
நிறைய கற்றுக் கொள்ளலாம்
பஞ்சாப் அணியில் இருக்கும் அஸ்வினிடம் தான் நிறைய கற்றுக் கொள்ள முடியும். மேலும், சர்வதேச வீரர்களிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டு நல்ல கிரிக்கெட் ஆட முடியும் என கூறியுள்ளார் வருண் சக்ரவர்த்தி.