யார் இந்த வருண் சக்கரவர்த்தி?
வருண் சக்கரவர்த்தி தமிழக அளவிலான தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் ஆடிய வீரர். அந்த தொடரில் முன்பு தன் "மிஸ்டரி ஸ்பின்" மூலம் எதிரணியை துவம்சம் செய்தவர்.
பஞ்சாப் அணி கொடுத்த விலை
இந்த நிலையில், 2019 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் அப்போது கேப்டனாக இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வருண் சக்கரவர்த்தியை 8.4 கோடி கொடுத்து வாங்கியது. அந்த ஏலத்தில் அதிக விலை கொடுக்கப்பட்ட வீரராக இருந்தார் வருண்.
வருண் காயம்
எனினும், ஐபிஎல் தொடருக்கு காயத்தோடு வந்த வருண், தொடரில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஏலத்தில் அவருக்கு இருந்த மவுசு போட்டிகளில் கிடைக்கவில்லை.
ஒரு போட்டி
ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடிய வருண், அதிலும் ஓவருக்கு 11 ரன்களுக்கும் மேல் வாரிக் கொடுத்து அதிர்ச்சி அளித்தார். அத்துடன் காயம் காரணமாக 2019 ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.
எந்த தொடரிலும் ஆடவில்லை
ஐபிஎல் தொடருக்குப் பின் நடந்த 2019 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரிலும் காயம் காரணமாக வருண் பங்கேற்கவில்லை. கடைசியாக அவர் ஆடிய கிரிக்கெட் போட்டி கடந்த ஐபிஎல் தொடரில் மார்ச் மாதம் ஆடிய ஒரே ஒரு போட்டி மட்டுமே.
கொல்கத்தா அணி போட்டி
இந்த நிலையில், இந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை யாரும் வாங்க மாட்டார்கள். அப்படியே வாங்கினாலும் 1 கோடிக்கும் குறைவான தொகைக்கே வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், கொல்கத்தா அணி அவரை வாங்க போட்டி போட்டது.
4 கோடி கொடுத்தது
பெங்களூர் அணியுடன் கடுமையாக மோதி, 4 கோடி கொடுத்து வருண் சக்கரவர்த்தியை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இது ஏலத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
செம அதிர்ஷ்டம்
வருண் சக்கரவர்த்திக்கு அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி வந்த அவரை ஒரு சீசனில் 8.4 கோடி கொடுத்தும், அடுத்த சீசனில் 4 கோடி கொடுத்தும் ஐபிஎல் அணிகள் போட்டி போட்டு வாங்கி இருப்பது ஆச்சரியம் தான்.
காரணம் யார்?
அவர் போட்டிகளில் என்ன தான் செய்வார் என்பதை ஐபிஎல் களம் இதுவரை காணவில்லை என்பதும் மற்றொரு ஆச்சரியம். அவருக்கு இத்தனை பெரிய எதிர்பார்ப்பு வர முக்கிய காரணம் தமிழக வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஐபிஎல் அணிகளின் கேப்டன்களாக இருந்தது தான். இந்த முறை கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு தான் நன்றி கூற வேண்டும்.