சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அண்ணா சாலையில் நடந்த போராட்டங்கள் சற்றே தணிந்து வருகிறது. இருப்பினும் ஒருவித பதற்றத்துடனேயே சேப்பாக்கம் மைதானம் காட்சி தருகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், டோணி தலைமையிலான சிஎஸ்கே விளையாடுகிறது.

இதனிடையில், காவிர் மேலாண்மை வாரியம் கோரி, பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போட்டியை நடத்தினால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர். அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின.
பல மணி நேரம் நடந்த இந்த போராட்டங்களால் அண்ணா சாலை போர்க்களம் போல் காட்சி அளித்தது. அந்தப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துளனர். பல இடங்களில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இருந்த போதும் ரசிகர்களாக இருப்பவர்கள் ஏதேனும் போராட்டங்களை நடத்தலாம்... அல்லது பாம்புகளை உள்ளே விட்டு புது போராட்டத்தை நடத்தலாம் என்பதால் பீதியிலேயே இருக்கிறது சேப்பாக்கம் மைதானம்.