மும்பை: ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடி வந்த அஜீத் சண்டிலாவுக்கு ஆயுள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவர் ஊழலில் ஈடுபட்டது நிரூபணமானதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேபோல மும்பையைச் சேர்ந்த வீரர் ஹிகன் ஷாவுக்கு 5 ஆண்டு தடை விதித்தும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கை:
அஜீத் சண்டிலாவுக்கு ஆயுள் தடை விதிக்கப்படுகிறது. ஹிகன் ஷாவுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, வாரியத்தின் தலைமை அலுவலகமான மும்பையில் கூடி விவாதித்தது. அதன் இறுதியில் அஜீத் சண்டிலா, ஹிகன் ஷா மீதான விவகாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறLு.
1. அஜீத் சண்டிலா
அஜீத் சண்டிலா வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் இழைத்தவராக, நிரூபிக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார்.
அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எந்த ஒரு கிளையின் சார்பிலும், எந்த அணியின் சார்பிலும், எந்த வகையான கிரிக்கெட் ஆட்டத்திலும் பங்கேற்பதிலிருந்து ஆயுளுக்குத் தடை விதிக்கப்படுகிறார்.
2. ஹிகன் ஷா
ஹிகன் ஷா மீதான ஊழல் புகார்கள் 3 பிரிவுகளின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் 5 ஆண்டு காலம் எந்தவிதமான கிரிக்கெட்டிலும் பங்கேற்கத் தடை விதிக்கப்படுகிறது.
3 அஸாத் ராப்
இன்னொரு வீரரான அஸாத் ராப் மீதான விசாரணை இன்று நடப்பதாக இருந்தது. ஆனால் அவர் இன்று நேரில் வரவில்லை. மாறாக தனது விவகாரத்தில் நேர்மையான முறையில் விசாரணை நடக்கவில்லை. எனவே இன்னொரு அதிகாரி மூலம் அவரது வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அவருக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதை அவர் பிப்ரவரி 9ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அவர் மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் என்று வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசாந்த் பாதையில்
ஏற்கனவே ஐபிஎல் மேட்ச்பிக்ஸிங் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த் ஆயுள் தடை விதிக்கப்பட்டார். ஆனால் தனது தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து அதில் வென்றுள்ளார் ஸ்ரீசாந்த் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அடுத்த செட் தடையை பிசிசிஐ அறிவித்துள்ளது.