கிரேக் சேப்பல்
2005 முதல் 2007 வரை இந்திய அணியில் பல குழப்பங்களை உண்டாக்கி இருந்தார் கிரேக் சேப்பல். அதே காலகட்டத்துக்கு பின் இர்பான் பதான் பார்ம் இழந்தார். அதனால், இர்பான் பதான் பார்ம் இழக்க கிரேக் சேப்பல் தான் காரணம் என சிலர் கூறி வந்தனர்.
பதான் சாதனை
இர்பான் பதான் சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 59 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அளவில் வேகமாக 100 ஒருநாள் போட்டி விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையை செய்தார்.
13 ஆண்டுகள்
அவரது சாதனையை முறியடிக்க 13 ஆண்டுகள் ஆனது. ஆம், கடந்த ஆண்டு தான் அந்த சாதனையை வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி முறியடித்தார். ஆனால், அவரது அடுத்த 73 விக்கெட்களை வீழ்த்த அவருக்கு 61 போட்டிகள் தேவைப்பட்டது.
விமர்சனம்
அவரது விக்கெட் எடுக்கும் திறன் குறைந்தது. அவரால் பந்தை முன்பு போல ஸ்விங் செய்ய முடியவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தியது மற்றும் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள முயன்றது போன்றவை தான் என கூறி வந்தனர்.
மாற்றிவிட்டாரா?
கிரேக் சேப்பல் தான் இர்பான் பதானை பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் மாற்றி விட்டார் எனவும் கூறி வந்த நிலையில், அதை மறுத்துள்ளார் இர்பான் பதான். தன்னை டாப் ஆர்டரில் களமிறக்கும் யோசனையை கிரேக் சேப்பல் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
பதான் அதிரடி ஆட்டம்
2005இல் இலங்கை அணிக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் போட்டியில் இர்பான் பதான் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவர் 70 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இந்தியா அந்தப் போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
யார் தந்த யோசனை?
"உண்மையில், அது சச்சினின் யோசனை. அவர் ராகுல் டிராவிட்டுக்கு ஆலோசனை கூறி, என்னை மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைத்தார். அவர், இர்பானிடம் சிக்ஸ் அடிக்கும் பலம் உள்ளது. புதிய பந்து மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களை ஆடும் திறனும் உள்ளது என்றார்." எனக் குறிப்பிட்டார் பதான்.
வாய்ப்பு அளிக்கவில்லை
மேலும், 2008ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தான் அதிரடி ஆட்டம் ஆடி அணியை வெற்றி பெற வைத்தும் அடுத்து வந்த நியூசிலாந்து தொடரில் தனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு வர என்ன செய்ய வேண்டும் என எனக்கு யாரும் கூறவில்லை என்றார் பதான்.