மும்பை: நேற்று நடைபெற்ற வாழ்வா சாவா என்கிற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் நிறைய தவறுகளை செய்தது. அதில் முதன்மையானது பாண்டியா சகோதரர்களை முன்னிலைப்படுத்தி மற்ற வீரர்களை நம்பாமல் போனது.
நேற்றைய ஆட்டம் என்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதி முக்கியமான ஆட்டம். சொந்த மைதானத்தில் ராஜஸ்தானின் சவாலை நம்பிக்கையோடு எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா, அணியையும் சிறப்பாகவே தேர்ந்தெடுத்திருந்தார்.
லூவிஸ், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பெரிதாக எடுபடவில்லை. இதனை சரி செய்யும் பொருட்டே, தென் ஆப்பரிக்காவின் டுமினி மற்றும் ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங் ஆகியோரை அணியில் சேர்த்தனர். பென் கட்டிங் பொல்லார்டின் இடத்தை ஈடுசெய்யும் பொருட்டு சேர்க்கப்பட்டார். ஆனால், டுமினி துவக்கம் முதல் இறுதி வரை எங்கு வேண்டுமென்றாலும் சிறப்பாக செயல்படக்கூடிய வித்தகர்.
நேற்றைய போட்டியில் முதல் பத்து ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 80 ரன்களை சேர்த்த மும்பை அடுத்த பத்து ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களை அடித்தது.
இதற்கு முக்கிய காரணம் ஜோஃரா ஆர்ச்சர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்ததுதான். பாண்டியா சகோதரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ரன்களை குவித்திருந்தாலும், இருவருமே பேட்டிங்கில் ஸ்பெஷலிஸ்ட் ஆட்டக்காரர்கள் இல்லை.
இறுதி ஓவர்களில் கண்ணை மூடிக்கொண்டு சுற்றும் வேலையை சிறப்பாக செய்ய வல்லவர்கள், அதிலும் ஹார்திக் பாண்டியா எப்படி ரன்களை சேகரித்தார் இந்த ஐபிஎல் போட்டிகளில் என்று மற்ற அணிகள் நோட்டமெடுத்தால் தலையே சுற்றிவிடும். அந்த அளவிற்கு அவர் அடிக்க நினைத்த இடங்களுக்கு அப்படியே எதிர் திசையில் தான் பந்துகள் சென்றுள்ளது.
இப்படி இக்கட்டான தருணங்களில், சிறப்பாக ஆடக்கூடிய வீரரான டுமினியை உள்ளே அனுப்பாமல் வீணடித்தது மிகவும் அதிர்சித்தரக்கூடிய செயல்தான். பென் கட்டிங் தனக்கு கிடைத்த ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் சிக்ஸர்கள் அடித்து மும்பைக்கு வெற்றிகளை தேடித்தந்தாலும், அவரின் திறமையின் மேல் நம்பிக்கை இல்லாததுப் போன்றே நடந்துகொண்டது மும்பை.
சரி, இவர்கள் இருவரையும் பாண்டியா சகோதரர்களுக்கு பின்தான் அனுப்ப போகிறோம் என்று நிர்வாகம் முன்பே முடிவெடுத்திருந்தால், இவர்கள் இருவருக்கும் பதிலாக நல்லத் தரமான பந்துவீச்சாளர்களை களத்தில் இறக்கி எதிரணிக்கு இன்னமும் சவாலை அதிகரித்திருக்கலாம். ஏனென்றால் டுமினி, கட்டிங் இருவரும் பந்து வீச்சும் திறமை இருந்தாலும் ரோஹித் ஷர்மா அவர்களை அதிலும் பயன்படுத்தவில்லை.
பதினோரு நபர்கள் ஆடவேண்டிய போட்டியில் தெரிந்தே ஒன்பது நபர்களை மட்டுமே உபயோகித்த மும்பை நிர்வாகத்தை நினைத்து வருத்தத்தில் உள்ளனர் ரசிகர்கள். மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் கட்டாயமாக வெற்றிப்பெற வேண்டுமென்கிற சூழ்நிலையிலாவது மேற்கூறிய தவறுகளை திரும்பவும் செய்ய மாட்டார்கள் என்று நம்புவோமாக.