பும்ரா புகழ்
பும்ரா சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி கலக்கினார். ஹாட்ரிக் சாதனை படைத்தார். வெறும் 7 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஜாம்பவான்கள் பாராட்டு
அவர் பந்து வீச்சை கண்டு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களே மிரண்டு போனார்கள். பும்ராவை பாராட்டாத ஒரு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரை கூட பார்க்க முடியவில்லை. ஊடகங்களும் பும்ராவை புகழ்ந்தன.
ஆர்ச்சர் மிரட்டல்
அதே போல, சில மாதங்கள் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, தன் முதல் டெஸ்ட் தொடராக ஆஷஸ் தொடரில் ஆடி வரும் ஜோப்ரா ஆர்ச்சரும், புகழ் மழையில் நனைந்து வருகிறார்.
ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலையில் தாக்கும் வகையில் பவுன்சர் வீசியது, மெதுவாக ஓடி வந்து மின்னல் வேகத்தில் பந்து வீசுவது என ஒவ்வொரு நாளும் அவரைப் பற்றி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
மீடியா தான் காரணம்
அவர்கள் இருவரை பற்றியும் பேசிய தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ரபாடா, அவர்கள் இருவரும் நல்ல பந்துவீச்சாளர்கள். ஆனாலும், ஊடகங்கள் சில வீரர்களை உயர்த்திப் பேசுகின்றன. அது பரவாயில்லை என கூறி இருக்கிறார்.
உச்சத்திலேயே இருக்க முடியாது
மேலும், நான் நன்றாக விளையாடுகிறேன் என எனக்கு தெரியும். ஆர்ச்சர் இயற்கையிலேயே திறமையானவர். பும்ரா அற்புதங்கள் செய்து கொண்டு இருக்கிறார், அது உங்கள் போட்டியை உயர்த்த உதவும். ஆனால், என்னால் ஒரு விஷயத்தை மட்டும் கூறமுடியும். நீங்கள் எப்போதும் உச்சத்திலேயே இருக்க முடியாது என்றார்.
ரபாடாவுக்கு பொறாமையா?
ரபாடா பேசியதை பார்த்தால் பும்ரா, ஆர்ச்சர் மேல் பயங்கர பொறாமையில் இருக்கிறார் என தெரிகிறது. அவர்களை பாராட்டினாலும், எப்போதும் உச்சத்தில் இருக்க முடியாது என கூறி இருக்கிறார். அவர்கள் இருவரின் வளர்ச்சிக்கு முன் ரபாடா தான் வேகப் பந்துவீச்சாளர்களில் உச்சத்தில் கோலோச்சி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர்
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன தொடரில் ரபாடா ஆட உள்ளார். முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. செப்டம்பர் 15 முதல் இந்த தொடர் துவங்க உள்ளது. அதை தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளும் நடக்க உள்ளது.