கோல்கட்டா: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்லாவிட்டாலும், நமது வீராங்கனைகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்தே, மகளிர் கிரிக்கெட் பிரபலமடையத் துவங்கியது. பல்வேறு பதவிகளும், பரிசுகளும், அவர்களுக்கு கிடைத்து வருகின்றது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், பெனாடிக் விளையாட்டு மியூசியம் அமைந்துள்ளது. இங்கு உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் நினைவான பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
கால்பந்து ஜாம்பவான் பீலே, உலகின் மின்னல் மனிதன் உசேன் போல்ட், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், துப்பாக்கி சுடும் வீரரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், செஸ் சூப்பர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், பாட்மின்டன் இளம் புயல் பி.வி. சிந்து என, பல பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள் இங்கு உள்ளன.
சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அசத்திய, வேகப்பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி, அரை இறுதி ஆட்டத்தின்போது பயன்படுத்திய, இந்திய அணி சட்டை, இந்த மியூசியத்தில் இடம்பெற உள்ளது.
லண்டனில் லார்ட் மைதானத்தில், இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் ஜூலனின் சட்டைகள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து, ஜூலனின் சட்டை, கோல்கட்டாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இது மிகப் பெரிய கவுரவும். அதே நேரத்தில், இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் என்பதில் மகிழ்ச்சி என்கிறார் கோஸ்வாமி.