கிறிஸ்ட்சர்ச்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியடைந்த நிலையில், ஜூனியர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதே நேரத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாட சென்றுள்ள இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், 189 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடக்கிறது. அதில் பங்கேற்க சென்றுள்ள இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் நேற்று பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு, 332 ரன்கள் குவித்தது. ஆர்யன் ஜூயல், 86 ரன்களும், ஹிமான்சு ரானா 68 ரன்களும் குவித்தனர்.
அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா, 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 143 ரன்களுக்கு சுருண்டது. ஜீன் டூப்ளசி 50 ரன்கள் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரல், 23 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.