தோல்வி அடைந்தாலும் கோஹ்லி ஹேப்பி அண்ணாச்சி!
பெங்களுரு: தொடர்ந்து 10வது ஒருதினப் போட்டியில் வெற்றி என்ற புதிய சாதனை படைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முயற்சிக்கு ஆஸ்திரேலியா ஸ்பீட் பிரேக் போட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று நடந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், கேப்டன் விராத் கோஹ்லி ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இந்தியா ஏற்கனவே தொடரை வென்றுவிட்டது. இந்த நிலையில், 4வது ஒருதினப் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் 5-0 என ஒயிட்வாஷ் செய்த கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 5-0 என ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

டேவிட் வார்னர் அதிரடி
மழை பெய்து ஓய்ந்த பெங்களூருவில் நேற்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 335 ரன்கள் இலக்கு நிர்ணயித்தபோதே, சரி சற்று கடினமான இலக்குதான் என்று நினைக்க தோன்றியது.

சரியான துவக்கம் கொடுத்த ரோஹித், ரஹானே
ஆனால், அஜிங்க்யா ரஹானே, ரோஹித் சர்மா சரியான துவக்கத்தை கொடுத்தனர். ஹார்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், மணீஸ் பாண்டே ஆகியோரும் தங்களுடைய பங்கை சிறப்பாகவே செய்தனர்.

2019 உலகக் கோப்பைக்கு ஆயத்தம்
2019 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் முனைப்பில் கிரிக்கெட் அணி நிர்வாகமும் கேப்டன் கோஹ்லியும் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று போட்டிகளில் விளையாடாதவர்களுக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாடம் கற்க உதவும் தோல்வி
இந்தப் போட்டியின் தோல்வியின் மூலம், எங்கே தவறு உள்ளது, அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்று விராட் கோஹ்லி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications