பிரதமர் மோடி செஞ்சது சரி.. அவர் சொல்வதை கேளுங்க.. மக்களுக்கு கோலி அன்பு கோரிக்கை
டெல்லி: பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் லாக் டவுன் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் நல்லது. அதை அவர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனாவைரஸ் பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு லாக் டவுன் அமல்படுத்துவதாக அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர். அதேபோல விளையாட்டுத்துறையினரும் வரவேற்றுள்ளனர். கேப்டன் கோலியும் பிரதமர் உத்தரவை வரவேற்றுள்ளார்.
பிரதமர் அறிவிப்புக்கு கோலி வரவேற்பு
இதுகுறித்து விராட் கோலி போட்டுள்ள டிவீட்டில், பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். நமது நாட்டு மக்கள் அனைவரும் 21 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். சோசியல் டிஸ்டன்சிங்தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே தீர்வு. நம்மிடமிருந்து யாருக்கும் கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க இது உதவும். எனவே அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருங்கள் என்பது எனது வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.
கோச் ரவி சாஸ்திரியும் வரவேற்பு
இதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பிரதமரின் அழைப்பை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், வார்த்தைகளே இல்லை. இதுதான் இப்போது கட்டாயம் தேவை. சிறந்த தலைமைத்துவம் இதுதான். இதுவரை இல்லாத உறுதிப்பாட்டுடன் நாடு நடை போட வேண்டியுள்ளது. முன்பை விட உறுதியாக, வலிமையாக நாடு மீண்டு வரும் என்று கூறியுள்ளார் சாஸ்திரி.
கெவின் பீட்டர்சனும் கோரிக்கை
இவர்கள் மட்டுமல்லாமல் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும் இந்தியாவின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இந்தியில் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், இந்திய அரசின் உத்தரவுப்படி மக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவைப் போலவே இங்கிலாந்தும் கூட கொரோனோவைரஸால் தவித்து வருவது நினைவிருக்கலாம்.

அஸ்வின், புஜாரா விடுத்த மெசேஜ்
இவர்கள் தவிர சத்தீஸ்வர் புஜாரா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகம்மது கைப் என பல இந்திய வீர்ர்களும் மக்களுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தபடி உள்ளனர். வீடுகளுக்குள்ளேயே இருந்து இந்த சவாலை வெல்வோம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கொரோனாவைரஸ் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டியபடி உள்ளனர். இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.


Click it and Unblock the Notifications