4 வீரர்கள் வெளியேற்றம்
பிசிசிஐயும் டோணியின் முடிவை மறுபரிசீலனை செய்ய கோரவில்லை. உடனடியாக விராட் கோஹ்லியை கேப்டனாக்கிவிட்டது. இந்நிலையில் சிட்னியில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில், ஒப்பனர் ஷிகர் தவான், ஒன்டவுன் பேட்ஸ்மேன் பூஜாரா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். டோணி அணியில் இல்லை, அதேபோல பவுலர்களில் இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார்.
ஷிகர் தவானுக்கு அல்வா
லோகேஷ் ராகுல், ரோகித் ஷர்மா, சாஹா (விக்கெட் கீப்பர்), புவனேஸ்வர்குமார் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவானுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள லோகேஷ் ராகுலுக்கு இது இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும். அவர் களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சுகளிலும் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை. ஆயினும் ராகுலுக்கு வாய்ப்பு தந்துள்ள கேப்டன் கோஹ்லி, தவானை கழற்றிவிட்டுள்ளார். இதற்கு காரணம், தவான் மீதான கோஹ்லியின் தனிப்பட்ட விரோதம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவான் திடீர் மறுப்பு
கோஹ்லிக்கு தவான் மீது கோபம் ஏற்பட காரணம் 2வது டெஸ்டில் நடந்த ஒரு சம்பவம்தான். அதாவது, அந்த டெஸ்டின் 3வது நாள் ஆட்ட நேர முடிவில், தொடக்க ஆட்டக்காரர் விஜய் அவுட் ஆன நிலையில், தவானும், புஜாராவும் விளையாடிக் கொண்டிருந்தனர். 100 ரன்களை கடந்து இந்தியா அப்போது வலுவான நிலையில்தான் இருந்தது. ஆனால் 4வது நாள் ஆட்ட நேர தொடக்கத்தில் மைதானத்திற்குச் செல்ல தவான் கடைசி நிமிடத்தில் மறுத்துவிட்டார். பயிற்சியின்போது தனது கையில் அடிபட்டுள்ளதால் களமிறங்க முடியாது என்று தவான் கூறிவிட்டார்.
சீட்டுக்கட்டு போல சரிந்த இந்திய அணி
எனவே ஆயத்தம் இன்றி திடீரென கோஹ்லி களமிறங்க வேண்டியதாயிற்று. உடனடியாக கோஹ்லி அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அத்தனைபேரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இந்த சம்பவம் ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணிக்கு தோல்வியை பரிசளித்தது.
சண்டையை சத்தம்போட்டு சொன்ன டோணி
டோணியும் இந்த சம்பவம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். தவானின் திடீர் அறிவிப்பால், வீரர்களுக்கான ஓய்வறையில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதுதான் ஆட்டத்தை மாற்றிவிட்டது என்று டோணி கூறியிருந்தார். இதனிடையே அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய கோஹ்லி, தவானை பிடித்து காய்ச்சி எடுத்ததாகவும், தவானும் பதிலுக்கு கோஹ்லியிடம் சண்டை போட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
பழி வாங்கி விட்டாரா கோஹ்லி?
இந்த மோதலை மனதில் வைத்துக் கொண்டுதான் தவானை அணியில் இருந்து கழற்றிவிட்டுள்ளார் கோஹ்லி என்று சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய அணிக்குள், யார் பெரியவர் என்ற அரசியல் கொழுந்துவிட்டு எரிவது, டோணி ஓய்வு, தவானுக்கு கல்தா போன்ற சம்பவங்களால் அம்பலப்பட்டுள்ளது.