பத்திரிக்கை செய்தி என்ன?
அந்த ஹிந்தி பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி இது தான். "இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பல சமயம் அணிக் கூட்டங்களில் கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா பங்கேற்கிறார். அது பல வீரர்களுக்கு அசௌகரியமாக உள்ளது. பாதுகாப்பற்ற உணர்வை அளித்துள்ளது"
தவான் மனைவியுடன் சண்டை
மேலும், "இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது அனுஷ்கா சர்மா, தவானின் மனைவி ஆயிஷாவிடம் தனிப்பட்ட முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். ஆயிஷாவுக்கு அது பிடிக்காததால், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அனுஷ்காவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் ஆயிஷா. அவர்களுக்குள் நடந்த சண்டை தான் தற்போது தவான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம். அணியின் வீரர்கள் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் ரோஹித் உட்பட பலரை எரிச்சலடைய வைத்துள்ளது. ரோஹித் சமீபத்தில் சமூக வலைதளத்தில் கோலியை பின்தொடர்வதில் இருந்து தன்னை நீக்கிக் கொண்டார்" என கூறப்பட்டுள்ளது.
தவான் நீக்கத்திற்கு காரணமா?
இதில் ஷிகர் தவான் நீக்கப்பட்டதற்கு அனுஷ்காவுடன், அவர் மனைவி போட்ட சண்டை தான் காரணம் என கூறப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது புரியவில்லை. தவான் பந்து ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் சரியாக ரன் எடுப்பதில்லை. அதே சமயம், இந்திய துணைக் கண்டத்தில் சரமாரியாக ரன் குவிக்கிறார். ஆசிய கோப்பை தொடரில் கூட அதிக ரன் குவித்தது தவான் தான். அடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் நடக்க உள்ள நிலையில் அதில் தவான் சரியாக ஆடமாட்டார் என்ற காரணத்தாலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் நீக்கப்பட்டார் என கூறப்படுகிறது.
[ முரளி விஜய்க்கு ஒரு நியாயம், தவானுக்கு ஒரு நியாயமா? சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புங்க ]
அனுஷ்கா அணியில் தலையிடுகிறாரா?
அனுஷ்கா சர்மா இங்கிலாந்தில், இந்திய அணியின் தனிப்பட்ட புகைப்படத்தில் இடம் பெற்றது கடும் விவாதத்தை எழுப்பியது. மற்ற வீரர்களின் மனைவிகள் யாரும் அந்த நிகழ்வில் இடம் பெறாத நிலையில் அவர் மட்டும் பங்கேற்றார். பிசிசிஐ, வீரர்களின் மனைவிகள் பங்கேற்பதில் தவறில்லை என சமாளித்தது. அதை கேலி செய்து போட்ட பதிவு ஒன்றை லைக் செய்தார் ரோஹித் சர்மா. அப்போதே அணியில் ஏதோ "உள்குத்து" இருக்கிறது என்பது புலனானது. மேலும், ரோஹித் சர்மா கோலியை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் இருந்து "அன்ஃபாலோ" செய்தார் என ஒரே பேச்சாக இருந்தது. அதே போல, ஆசிய கோப்பை வென்ற ரோஹித் அணியை சும்மா மாற்றிக் கொண்டு இருக்காமல், என் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதை நான் முக்கியமாக கருதுகிறேன் என கோலியை குத்திக் காட்டினார். ஆக மொத்தத்தில், அனுஷ்கா அணி விவகாரத்தில் தலையிடுகிறாரா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க, இந்திய கிரிக்கெட் அணியில் விரைவில் பூகம்பம் இருக்கு.
[ ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கோலியை "அன்-பாலோ" செய்த ரோஹித்.. ஏன், என்னாச்சு? ]
கடைசியா உண்மையா? இல்லையா?
சரி, அனுஷ்கா இந்திய கிரிக்கெட் அணி விவகாரங்களில் தலையிடுகிறாரா? இல்லையா? அனுஷ்கா நேரடியாக இதை செய்ய முடியாது. கோலி மூலமாகத் தான் செய்ய முடியும். கோலி சமீபத்தில் தான் எந்த அணித் தேர்வுகளிலும் தலையிடுவதில்லை என கூறியுள்ளார். இது உண்மையா என்ற கேள்விக்கு எனக்கு நேரடியான பதில் தெரியாவிட்டாலும், சமூக வலைதளத்தில் ஒருவர் கூறியதை அப்படியே கூறுகிறேன். "பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை தூக்கிட்டு, ரவி சாஸ்திரியை கொண்டு வந்தவர் கோலி. அவர் அணித் தேர்வில் தலையிடலைன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு".