கோஹ்லியை கவுன்டியில் ஆட விடுவது முட்டாள்தனமானது... மாஜி இங்கிலாந்து கேப்டன் டென்ஷன்!
லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து டூருக்கு முன்பாக கேப்டன் விராத் கோஹ்லியை கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட விடக் கூடாது. அப்படி நடந்தால் நமக்குத்தான் பாதகமாக அமையும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பாப் வில்லிஸ் கூறியுள்ளார்.
விராத் கோஹ்லியை கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட அனுமதிப்பது என்பது முட்டாள்தனமான முடிவு என்றும் வில்லிஸ் சீறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா, இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அதற்கு முன்பு கோஹ்லி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக உள்ளார்.
ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக சுர்ரே அணிக்காக ஆட கோஹ்லி திட்டமிட்டுள்ளர். இதுதான் வில்லிஸை டென்ஷனாக்கியுள்ளது.

முன்பு மோசமாக விளையாடியது போல
இதுகுறித்து வில்லிஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், கோஹ்லி இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ற பார்முக்கு வரக் கூடாது. முன்பு இங்கு வந்து மோசமாக விளையாடியது போலவே இந்த முறையும் அவர் ஆட வேண்டும். அவரது பேட்டிங் சராசரி 30ஐத் தாண்டக் கூடாது.

ஆடக் கூடாது
அவர் பார்முக்கு வராமல் தவிக்க வேண்டும். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் அவர் கவுன்டி கிரிக்கெட்டில் ஆடக் கூடாது. வெளிநாட்டு வீரர்களுக்கு இதுபோல பயிற்சி எடுக்க இடம் கொடுத்தால் நாம் நமது மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். அதை நான் விரும்பவில்லை என்றார் வில்லிஸ்.

கவுன்டி கிரிக்கெட்டில் ஆடினால்
கோஹ்லி மட்டுமல்லாமல் சட்டேஸ்வர் புஜாரா (யார்க்ஷயர்), இஷாந்த் சர்மா (சசெக்ஸ்) ஆகியோரும் கவுன்டி கிரிக்கெட்டில் ஆட தயாராகி வருகின்றனர். இவர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் ஆவர். இந்தியாவின் முன்னணி வீரர்கள் இதுபோல கவுன்டி கிரிக்கெட்டில் ஆடினால் அது இங்கிலாந்துக்கு பாதகமாக அமையும் என்பது வில்லிஸின் வாதமாகும்.

முட்டாள்தனமான முடிவு
வில்லிஸ் மேலும் கூறுகையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் கவுன்டி கிரிக்கெட்டில் நிறைய ஆடி பயிற்சி பெறலாம். அதுதான் அணிக்கு நலம் பயக்கும். மாறாக, கோஹ்லி போன்றோருக்கு இடம் கொடுத்தால் அது இங்கிலாந்து அணிக்கு கடுமையான பாதிப்பையே தரும். மேலும் இது முட்டாள்தனமான முடிவும் ஆகும் என்று கூறியுள்ளார் வில்லிஸ்.

எதிர்க்கக் கூடாது
ஆனால் சுர்ரே மகளிர் கிரிக்கெட் அணியின் இயக்குநர் எபோனி ரெய்ன்போர்ட் பிரன்ட் கூறுகையில், கோஹ்லி போன்றோர் வந்த ஆடுவது கவுன்டி கிரிக்கெட்டுக்கு கவுரவம் சேர்ப்பதாக அமையும். இதை வரவேற்க வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது. கடந்த ஆண்டு இதுபோலத்தான் குமார் சங்கக்கரா சுர்ரே அணிக்காக ஆடி சிறப்பாக ரன்கள் குவித்தார். சுர்ரே அணிக்கு அது மிகப் பெரிய ஊக்கமாக அமைந்தது என்று கூறுகிறார் எபோனி.


Click it and Unblock the Notifications