பந்துவீச்சு கூட்டணி
குல்தீப் யாதவ் இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா ஜோடிக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டவர். அவருடன் சாஹல் இணைந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20யில் சிறந்த சுழற் பந்துவீச்சு கூட்டணியை உண்டாக்கினர். சமீபத்தில் இவர்கள் சேர்ந்து பந்து வீசவில்லை என்றாலும், இருவரும் இந்திய அணியின் எதிர்கால பந்துவீச்சாளர்களாக கருதப்படுகின்றனர்.
குல்தீப் யாதவ் பந்துவீச்சு
குல்தீப் யாதவ் 60 ஒருநாள் போட்டிகளில் 104 விக்கெட்களும், 6 டெஸ்ட் போட்டிகளில் 24 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். அவர் 2017இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். தன் முதல் போட்டியிலேயே 4 விக்கெட்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார்.
டெஸ்ட்
2017இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது ஆஸ்திரேலியா. அப்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்தன.
கோலி ஆடவில்லை
தொடர் வெற்றியை நிர்ணயம் செய்யப் போகும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆடவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த திட்டமிட்டது.
அனில் கும்ப்ளே திட்டம்
அப்போது பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, குல்தீப் யாதவ்வை மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக பயன்படுத்த திட்டமிட்டார். அது சிறப்பாக வேலை செய்தது. குல்தீப் யாதவ் அந்தப் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தினார்,
இந்தியா வெற்றி
அவர் வீழ்த்திய நால்வரில் மூவர் முக்கிய பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் பின் குல்தீப் யாதவ் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியிலும் தேர்வு செய்யப்பட்டார்.
டெஸ்ட் அறிமுகம்
தன் அறிமுக டெஸ்டில் ஆடும் முன் என்ன நடந்தது? அனில் கும்ப்ளே என்ன சொன்னார்? என்பது பற்றி விரிவாக கூறி உள்ளார் குல்தீப் யாதவ். "தரம்சாலாவில் என் டெஸ்ட் அறிமுகத்தை நினைத்தாலே நான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்." என்றார்.
அனில் கும்ப்ளே உத்தரவு
"அந்த சமயத்தில் எனக்கு தோன்றிய முக்கிய விஷயம் எப்படி பந்து வீசுவது? என்பது தான். அந்த போட்டிக்கு முந்தைய நாள் நன்றாக நினைவில் உள்ளது. அனில் கும்ப்ளே, "நாளை நீ ஆடுகிறாய். நீ 5 விக்கெட் எடுக்க வேண்டும்" என்றார்." எனக் கூறினார் குல்தீப் யாதவ்.
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் சொன்னது..
"நான் அப்போது சில வினாடிகள் நின்று விட்டேன். பின், "நிச்சயம். நான் 5 விக்கெட்கள் எடுப்பேன்" என்றேன். லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் எனக்கு டெஸ்ட் தொப்பியை வழங்கினார். எனக்கு அவர் ஆலோசனைகள் கூறினார். அவர் என்ன சொன்னார் என்றே எனக்கு தெரியாது. ஏனெனில், அப்போது நான் எதுவும் புரியாமல் இருந்தேன்" என்றார் குல்தீப்.
பயந்து போய் இருந்தேன்
"நான் அதிக அழுத்தத்தை உணர்ந்தேன். உண்மையில் பயந்து போய் இருந்தேன். அது மிகப் பெரிய இடம் என்பதை உணர்ந்தேன். இங்கே நாம் எப்படி விக்கெட் எடுப்பது என எண்ணினேன். சில ஓவர்கள் வீசிய உடன் நான் நிதானம் ஆனேன்." என்றார் குல்தீப்.
முதல் விக்கெட்
அந்தப் போட்டியில் முதல் விக்கெட்டாக டேவிட் வார்னரை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். அப்போது தான் கண் கலங்கியதாக கூறினார். "அது தான் என் முதல் டெஸ்ட் விக்கெட். அதை என்னால் மறக்க முடியாது. அப்போது நான் கண் கலங்கிய நிலையில் இருந்தேன்" என்றார்.