லக்ஷ்மிபதி பாலாஜி
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2002இல் அறிமுகம் ஆனார் லக்ஷ்மிபதி பாலாஜி. ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி உள்ளார்.
கொரோனா பேட்டி
73 ஐபிஎல் போட்டிகளில் 76 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.
அந்த சந்தேகம்
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா தற்போது 21 நாட்கள் லாக்டவுனில் உள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இதன் முடிவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வருமா? அல்லது இந்த நிலை தொடருமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
போராடும் ஆற்றல்
இது பற்றி பேசிய லக்ஷ்மிபதி பாலாஜி, "நாம் பிழைத்து இருக்கவே வடிவமைக்கப்பட்டவர்கள். நம் முன்னோர்கள் வியாதிகளை எதிர்த்து போராடும் ஆற்றல் பெற்று இருந்தனர். நம் பெற்றோர் மோசமான நேரங்களை கடந்து வந்துள்ளனர்" என நேர்மறையாக பேசினார்.
சுனாமி, வெள்ளம்
"நாம் கூட மோசமான நேரங்களை கடந்துள்ளோம். 2004 சுனாமி, சென்னை வெள்ளம் ஆகியவை அவற்றில் சில. மக்கள் ஒற்றுமையாக இணைகிறார்கள். நாடுகள் தங்கள் இடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள்" என்றார்.
மருத்துவர் பேச்சை கேட்கணும்
"இந்த நேரத்தை நாம் மதிக்க வேண்டும். இந்த நாளை எப்படி கடக்கப் போகிறோம் என்றால் அது கடினமாக இருக்கும். ஆனால், நிதர்சனம் என்ன என்பதை புரிந்து கொண்டு, சுய ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். லேசான காய்ச்சல் இருந்தாலும் நாம் மருத்துவர் சொல்வதை கேட்க வேண்டும்" என்றார்.
பின்பற்ற வேண்டும்
"இது உலகம் முழுவதும் உடல்நலம் மோசமாக இருக்கும் நேரம். நாம் நம் சுகாதாரத் துறை அதிகாரிகள் சொல்வதை கேட்க வேண்டும். அரசு முன்னே வந்து, நல்ல யோசனைகளுடன் தன் வேலையை செய்கிறது. நாம் அதை பின்பற்ற வேண்டும்" என்றும் கூறினார் லக்ஷ்மிபதி பாலாஜி.