ஆஸி. வெல்லும்
கடைசியாக ஆஸ்திரேலிய அணி 2004 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது டெஸ்ட் தொடரை வென்றது. அதன் பிறகு இந்தியாவே கோலோச்சி வருகிறது. இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு எங்களுடைய அணி நிகழ்த்திய சாதனையை தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணி படைக்கும் என்று முன்னாள் கேப்டன் கில்கிறிஸ்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இம்முறை ஆஸ்திரேலியா தான் வெல்லும்.
ஒரே மாதிரி இருக்கிறது
நான் மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறேன். ஏனென்றால் ஆஸ்திரேலியா தனது அணியை இப்போதே தயார் செய்து விட்டது.எந்த 11 வீரர்களை தேர்வு செய்வார்கள் என்பது குறித்து முடிவு செய்து விட்டார்கள். இந்த அணியையும் எங்களுடைய அணியையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டுமே ஒரே மாதிரி இருக்கிறது.
எப்போதும் இந்தியாவுக்கு செல்லும் அணிகள் ஏதேனும் ஒரு புதிய சுழற் பந்துவீச்சாளர்களை அழைத்துச் சென்று அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புவார்கள். ஆனால் தற்போது உள்ள ஆஸ்திரேலியாவில் அப்படி ஏதும் இல்லை.
லயான் இருக்கிறார்
என்னை கேட்டால் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய சிறந்த 4 பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை நன்றாக ரிவர் ஸ்விங் செய்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இதில் ஆஸ்திரேலியாவில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளரான நாதன் லயானும் இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கிடைத்த சிறந்த ஆப் ஸ்பின்னர் என்றால் அவர்தான். இந்திய ஆடுகளங்களில் நீங்கள் எப்போதும் பொறுமை காக்க வேண்டும்.
பொறுமை முக்கியம்
விக்கெட் எடுக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக செயல்படாமல், நெருக்கடி அளிக்கும் விதமாக ஒரே மாதிரி பந்து வீசினால் உங்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்கும். போட்டியில் முதல் பந்தில் இருந்து ஸ்டெம்பை நோக்கி பந்தை வீசுங்கள். உங்களுடைய பெருமையெல்லாம் வாயில் போட்டு முழுங்கி கொள்ளுங்கள். ஸ்லீப் பில்டர்களை நிற்க வைப்பது விட பவுண்டரி லைனில் பில்டர்களை நிறுத்தி வையுங்கள். அதேபோல் ஷார்ட் கவர், மிட்விக்கேட் ஆகிய இடங்களில் பந்து பறந்து செல்லும் போது கேட்ச் பிடிக்க ஒரு ஆளை நிறுத்தி வையுங்கள். அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் இம்முறை ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் என நான் நம்புகிறேன்.