இந்திய இன்னிங்ஸ்
ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தார். இதனால் இந்திய அணியும் 15 - 1 விக்கெட் என இக்கட்டான சூழலில் இருந்தது. அதன் பின்னர் வந்த முன்னணி வீரர் விராட் கோலியும் தொடக்கத்தில் இருந்தே பதற்றத்துடன் காணப்பட்டார். எந்த பந்தில் அவுட்டாகப்போகிறார் என்பது போல ரசிகர்களும் பதறினர்.
தாஸ் செய்த தவறு
அதற்கேற்றார் போலவே ஒரு பந்து அமைந்தது. ஆட்டத்தின் 6வது ஓவரில் மெஹிடி ஹாசன் வீசிய 3வது பந்தை கோலி மிட் ஃப்ளிக் ஷாட் ஆட முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக பந்து நேராக ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த கேப்டன் லிண்டன் தாஸிடம் சென்றது. அழகாக சென்ற அந்த கேட்ச்-ஐ அவர் பிடிக்க தவறவிட்டார். விராட் கோலி போன்ற வீரரின் கேட்ச்-ஐ தவறவிட்டால் அவர் என்னென்ன செய்யப்போறாரோ என வங்கதேச ரசிகர்கள் பதறினர்.
கியரை மாற்றிய கோலி
கோலியை அப்படியே விட்டுவிடக்கூடாது என முடிவெடுத்த லிண்டன் தாஸ் அவரை வீழ்த்த பல வியூகங்களை வகுத்தார். ஆனால் " லட்டுல வச்சனு நினைச்சியா தாஸ், நட்டுல வச்சேன்" என்பது போல தனது டிராக்கையே மாற்றினார் கோலி. அதாவது ஒவ்வொரு ஓவரிலும் இஷான் கிஷானை அதிரடி காட்ட கூறிவிட்டு, மிகவும் நிதானமாக பார்ட்னர்ஷிப்பை மட்டும் கொடுத்தார் விராட் கோலி.
அப்படி என்ன வியூகம்
அதாவது ஒரு ஓவரில் 5 பந்தை இஷான் கிஷானை அதிரடி காட்டவைத்துவிட்டு, ஒரே ஒரு பந்தை மட்டும் தான் எடுத்துக்கொண்டார். அதிலும் ஸ்ட்ரோக் வைக்காமல் சிங்கிள் அடித்து ஸ்ட்ரைக்கை கொடுத்துக்கொண்டே இருந்தார். மேலும் இஷானுக்கு எப்படி ஆட வேண்டும் என அறிவுரை கூறிக்கொண்டே இருந்தார். அவரின் இந்த வியூகத்தால் 2வது விக்கெட்டிற்கு இருவரும் சேர்ந்து 200 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அவர்களை வங்கதேச பவுலர்களால் பிரிக்கவே முடியாதது போன்று ஆனது.
அதிரடி சதம்
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 85 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த 18 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். மறுபுறம் விராட் கோலியும் நிதானமாக விளையாடியே 54 பந்துகளில் 65வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் யாரும் நினைத்து பார்க்காத உயரத்திற்கு சென்றுள்ளது.