புதிய அணிகள்
குஜராத்தை சேர்ந்த அகமதாபாத் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்னோ ஆகியவற்றின் பெயர்களில் புதிய அணிகள் உருவாகியுள்ளன. சஞ்சிவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குரூப் ரூ. 7090 கோடிக்கு லக்னோ அணியையும், சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ரூ. 5600 கோடிக்கு அகமதாபாத் அணியையும் ஏலம் எடுத்துள்ளது.
ஆர்பிஎஸ்ஜி நிறுவனம்
இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது லக்னோ அணியின் ஏலம் தான். இரு அணிகளின் ஆரம்ப ஏலத்தை ரூ.2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் கொல்கத்தாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் சஞ்ஜீவ் கோயங்கா அதிகபட்சமாக ரூ.7090 கோடி ஏலம் கேட்டிருந்தார். இதனையடுத்து அகமதாபாத், லக்னோ என இரு அணிகளில் எதனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் அவர் லக்னோ அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.
கிரிக்கெட்டுடன் தொடர்பு
ஆர்பிஎஸ்ஜி குழுமத்திற்கு, ஐபிஎல் தொடர் ஒன்றும் புதிதல்ல. கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் சூதாட்ட புகாரில் சஸ்பண்ட் செய்யப்பட்டிருந்தன. அந்த சமயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அணிகளில் ரைசிங் புனே ஜெய்ண்ட்ஸ் அணியை வாங்கி நடத்தியது ஆர்பிஎஸ்ஜி குழுமம் தான்.
அணியின் செயல்பாடு
புனே அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்பட்டார். ஆனால் 2016ம் ஆண்டில் 7வது இடத்தையே பிடித்தது. பின்னர் 2017ல் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியில் அந்த அணி இறுதிப்போட்டி வரை சென்று மும்பை அணியிடம் தோற்றது. இந்த முறை பெரும் பலத்துடன் திரும்பி வரும் எனக்கூறப்படுகிறது.
மொத்த மதிப்பு
ஆர்பிஎஸ்ஜி நிறுவன தலைவர் சஞ்சீவ் கோயங்கா சர்வதேச அளவில் முதலீடு செய்துவரும் ஜாம்பவான் ஆகும். கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் தான் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. தற்போதைய நிலவரத்தின்படி இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.47,405 கோடியாகும். இவர்கள் ஏற்கனவே ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஏடிகே மோஹன் பாகன் அணியின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ளனர். இதே போன்று அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரிலும் ஆர்பிஎஸ்ஜி மாவேரிக்ஸ் கொல்கத்தா என்ற அணியை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் வீரர்களை ஐபிஎல்-ல் களமிறக்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.