டாக்கா: வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் கேப்டனுமான மொர்டசா 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேச அணி கேப்டன் மொர்டசா. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். தற்போது ஒருநாள், 'டுவென்டி-20' அணிகளுக்கு கேப்டனாக உள்ளார். வங்கதேச அணியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருபவர் இவர் தான்.
இவரது தலைமையில் வங்கதேச அணி பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வந்தது. சொந்த மண்ணில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் அசத்தியது.
சிறந்த வேகப்பந்து வீச்சாளரான மொர்டசா 52 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் வங்காள தேச அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வங்காள தேச அணியின் கேப்டன் மொர்டசா பேட்டிங் தேர்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் ''இதுதான் வங்காள தேச அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் தொடராகும். வங்காள தேச கிரிக்கெட் வாரியம், எனது குடும்பம், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
இதனால் மொர்டசா நாளை மறுநாள் நடக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
.