3வது ஒருநாள் போட்டி
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையில் 3வது ஒருநாள் போட்டி லக்னோவின் ஏகானா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
10,000 ரன்களை கடந்து சாதனை
இன்றைய போட்டியில் அவர் 36 ரன்களை அடித்துள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்களை கடந்துள்ளார். இந்த சாதனையை எட்டியுள்ள இரண்டாவது வீராங்கனை என்ற பெருமை அவருக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் இந்த சாதனையை எட்டிய முதல் வீராங்கனை.
ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள்
ஏற்கனவே ஒருநாள் தொடரில் 6000 ரன்களை எட்டியுள்ள முதல் வீராங்கனை என்ற பெருமை மிதாலிக்கு உள்ளது. இதில் 7 சதங்களும் அடக்கம். மேலும் 2,364 ரன்களை டி20யிலும் 663 ரன்களை டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அடித்துள்ளார். கடந்த 1999ல் ஐயர்லாந்துக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் விளையாடிய மிதாலி ராஜ், அதன்பின்பு திரும்பி பார்க்கக்கூட நேரமில்லாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அணி வீராங்கனைகள் பெருமிதம்
இதுவரை 200 ஒருநாள் போட்டிகள், 10 டெஸ்ட்கள் மற்றும் 89 டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இந்த சாதனை குறித்து முன்னதாக அணியின் ஸ்மிரிதி மந்தனா மிதாலி ராஜ்க்கு பாராட்டு தெரிவித்திருந்தார். மிதாலி குறித்து அணியின் அனைத்து வீராங்கனைகளும் பெருமை கொள்வதாகவும் கூறியிருந்தார்.