தமிழ்தான் தாய்மொழி
மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். ஆனால் வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ், லீலா.
நாகப்பட்டினம்
துரைராஜின் பெற்றோர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள். அவரது தந்தைக்கு ரயில்வேயில் வேலை கிடைத்ததால் அங்கிருந்து ஐதராபாத்துக்கு குடும்பத்தோடு குடியேறிவிட்டார். துரைராஜ், விமானப்படையில் பணியாற்றி விட்டு, ஆந்திரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வீட்டில் எல்லோரும் பெரும்பாலும் பேசுவது தமிழ் தான். மிதாலிக்கும் தமிழ் நன்றாக தெரியும்.
10 வயதில் கிரிக்கெட்
பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்படும் மிதாலி ராஜ் சிறுவயதில் பரதநாட்டியத்தில் பெரிய அளவில் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் தந்தையின் உந்துதலால், 10வது வயதில் இருந்து கிரிக்கெட் மட்டையை கையில் பிடிக்க, இப்போது பல சாதனைகளை படைத்து இருக்கிறார்.
புகழாரம்
ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைத்தவர் மிதாலி. அவருக்கு சச்சின் டெண்டுல்கர், கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர், கோலி உள்ளிட்டோர் பாராட்டி இருந்தனர். மிதாலி ராஜ் உற்சாகமாக புத்தகங்களை படிக்கிறார். ஆனால் இப்போது வரலாற்று சாதனை புத்தகத்தையே மாற்றி எழுதியிருக்கிறார் என்று ஐசிசி புகழாரம் சூட்டியிருந்தது, குறிப்பிடத்தக்கது.