தந்தைக்கு மாரடைப்பு.. பார்க்க விரைந்த முகமது ஷமிக்கு விமானத்தால் ஏற்பட்டது தாமதம்
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் வீரர், முகமது ஷமியின் தந்தை மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பெங்களூரிலுள்ள நேஷனல் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது தந்தை தவுசீப் அகமது உள்ளிட்ட குடும்பத்தார், உத்தர பிரதேசத்தின், அம்ரோகா மாவட்டத்தில் வசித்து வரும் நிலையில், அவரது தந்தைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தவுசீப் அகமது டெல்லியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் ஷமிக்கு தெரியப்படுத்தப்பட்டதும், பெங்களூரிலிருந்து விமானம் மூலம் டெல்லி கிளம்பியுள்ளார் ஷமி. தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்துகொள்ளும்படி டிவிட்டரில் அவர் வேண்டுகோளும் விடுத்தார். ஆனால் அவரது பொறுமையை சோதிக்கும் விதமாக விமானம் 55 நிமிடங்கள் தாமதமாக கிளம்பியுள்ளது. இதையும் டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் டிவிட்டரிலேயே ஷமியை தொடர்பு கொண்டு அவரது தந்தைக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.
ஷமி தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்ட நிலையில் அவரது மனைவி ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்ததாக கூறி இஸ்லாமிய நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்திருந்ததும், அந்த விமர்சனங்களுக்கு முகமது கைஃப் போன்ற பிற கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications