உன்னை கோர்ட்டில் பாத்துக்கறேன் என்று ஷமி மிரட்டினார்.. மனைவி ஜஹான் குற்றச்சாட்டு
டெல்லி: தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் உள்ள முகமது ஷமியை பார்க்க சென்றபோது என்னை கோர்ட்டில் சந்தித்துக் கொள்வதாக கூறி சந்திக்க மறுத்துவிட்டதாக அவரது மனைவி ஹாசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்புள்ளதாக அவரது மனைவி ஜஹான் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தன்னை ஷமியும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். தன்னை கொலை செய்யவும் ஷமி முயற்சித்ததாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஷமிக்கு மேட்ச் பிக்சிங்கிலும் தொடர்பு உள்ளது என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் ஜஹான் முன்வைத்திருந்தார்.

ஷமிக்கு காயம்
ஷமியின் மூத்த சகோதரர் தன்னை பலாத்காரம் செய்ய வந்ததாகவும் ஜஹான் குற்றம்சாட்டியதை அடுத்து ஜஹானை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஷமி. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டேராடூனிலிருந்து டெல்லிக்கு சென்ற முகமது ஷமி விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்திக்க மறுத்த ஷமி
இதுகுறித்து தகவலறிந்த ஜஹான் தன் மகளை அழைத்து கொண்டு ஷமியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவர் பார்க்க மறுத்துவிட்டதாக ஜஹான் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜஹான் கூறுகையில், என்னை சந்திக்க மறுத்துவிட்டார். மாறாக நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

விரும்பவில்லை
எனினும் எங்கள் குழந்தையுடன் அவர் விளையாடினார். என்னை அவர் ஏற்கவில்லை. ஷமிக்கு எதிராக போராட நினைத்தேனே தவிர அவர் உடலில் காயம் ஏற்பட நான் விரும்பவில்லை.

என் கணவர்
அவர் என்னை மனைவியாக நினைக்காமல் இருக்கலாம். ஆனால் அவரை நான் இன்னும் காதலிக்கிறேன். ஏனென்றால் அவர் என் கணவர். அவரது தாய் பாதுகாவலர் போல் கூடவே இருக்கிறார் என்றார் ஜஹான்.


Click it and Unblock the Notifications