முடங்கிய விளையாட்டு
கொரோனாவின் தாக்கத்தால் சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் கடந்த ஆண்டில் முடங்கின. இதற்கு கிரிக்கெட்டும் விதிவிலக்கில்லை. கடந்த ஆண்டில் ஏறக்குறைய 8 மாதங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கினர்.
ஆஸ்திரேலிய தொடர்
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்துதான் அவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தனர். ஐபிஎல் 2020 சீசனில் துவங்கிய அவர்களது பயணம் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின்மூலம் தொடர்ந்து வருகிறது. வரும் 7ம் தேதி அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியினர் மோதவுள்ளனர்.
பிப்ரவரியில் துவக்கம்
வரும் பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்து அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவங்களிலும் போட்டித் தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளனர். இதைதொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது.
டி20 உலக கோப்பை
முன்னதாக ஏப்ரல் -மே மாதங்களில் வழக்கமாக நடைபெறும் ஐபிஎல் 2021 தொடரும் அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா விளையாடவுள்ளது. தொடர்ந்து ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, தென்னாப்பிரிக்க தொடர், நியூசிலாந்து சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
நியூசிலாந்து தொடர்
இந்திய அணி இந்த ஆண்டில் 16 ஒருநாள் போட்டிகள், 23 டி20 போட்டிகள் மற்றும் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான தொடருடன் நிறைவு செய்யவுள்ள இந்திய அணி, டிசம்பரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடருக்காக அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இதனிடையே, இந்த தொடர்களில் ஆதிக்கம் செலுத்தபோகும் இந்திய வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்களிடம் எழுந்துள்ளது. மேலும் உலகளவில் மேலும் பல்வேறு தொடர்கள் நடைபெறவள்ள சூழலில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் எந்த அணி மற்றும் வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.