ஓ நீங்க அப்படி வரீங்களா? மீண்டும் உருவாகும் சிஎஸ்கே விண்டேஜ் படை.. ஐபிஎல் ஏலத்தில் தோனி மெகா ப்ளான்!
கொச்சி: ஐபிஎல் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகவும் பழமையான திட்டத்தை கையில் எடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி.
ஐபிஎல் 2023 தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்தாண்டு மும்பை, சிஎஸ்கே அணிகள் மீது பெரும் எதிர்பார்ப்பு எகிறியிருந்த சூழலில் கடைசி நேரத்தில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.

ஐபிஎல் மினி ஏலம்
ஆனால் இந்தாண்டு எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது சிஎஸ்கே. ஏனென்றால் கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடப்போகும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கலாம். சென்னை மண்ணில் அவரை கோப்பையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். எனவே இதற்காக அணியில் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காலி இடங்கள்
சென்னை அணி இந்தாண்டு, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டன், பகத் வர்மா, கே.எம்.ஆசிஃப், நாராயண் ஜகதீசன் ஆகிய வீரர்களை கழட்டிவிட்டது. இதில் பிராவோ மற்றும் உத்தப்பா ஓய்வை அறிவித்துவிட்டனர். மீதமுள்ள ரூ.20.4 கோடியை வைத்துக்கொண்டு 8 வீரர்கள் வரை வாங்க வேண்டியுள்ளது.

தோனி திட்டம்
இந்நிலையில் இதற்காக தோனி போட்ட திட்டம் தான் மிகவும் பழமையானது. அதாவது தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11 புதிய கட்டமைப்பில் இருக்கும் என நினைத்தனர். ஆனால் அப்படி எதுவுமே செய்யாமல் சிஎஸ்கேவின் பழைய பலமான படை எப்படி இருக்குமோ, அதே போன்ற ஸ்டைலில் தான் தற்போது தேர்வு நடைபெறவுள்ளது. ஒரு அணிக்கு ஓப்பனிங், மிடில் ஆர்டர், ஃபினிஷிங், ஆல்ரவுண்டர் என இந்த நான்கும் தரமாக இருந்தால் சிறப்பு. அதனை தோனி எப்படி கையாள்கிறார் என பார்ப்போம்.

ஃபினிஷர் பணி
சிஎஸ்கேவுக்கு நீண்ட காலமாக பக்கபலமாக இருந்தவர் டுவைன் பிராவோ. அவரின் இடத்தை நிரப்புவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட தோனி, அதற்காக சாம் கரணை கொண்டு வந்தார். ஒரு சில போட்டிகளில் பிராவோவை உட்கார வைத்து கரணை ஆட வைத்தார். அது சரியாக உள்ளதால், தற்போதும் பிராவோவுக்கு மாற்றாக அவரை போன்ற திறமை பெற்ற சாம் கரணை எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொடுத்து எடுங்கள் எனக்கூறியுள்ளார்.

மிடில் ஆர்டர் மாற்றம்
இதே போல மிடில் ஆர்டரில் ராபின் உத்தப்பாவின் இடமும் அவரை போன்ற வீரரால் மாற்றப்படுகிறது. அது மணிஷ் பாண்டே தான். ஐபிஎல்-ல் நல்ல அனுபவம் வாய்ந்த மணிஷ் பாண்டே மிடில் ஆர்டரில் கலக்கக்கூடியவர். எனவே சரியாக மணிஷை கொண்டு வந்து மிடில் ஆர்டரை பலப்படுத்தவுள்ளார்.

ரெய்னாவுடைய இடம்
சென்னை அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்ப இதுவரை எந்த வீரரும் வரவில்லை. அதற்கான வேட்டை இந்தாண்டு நடக்கவுள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரூசோவ்-க்கு குறி வைத்துள்ளனர். இடதுகை வீரரான இவர், ரெய்னாவை போலவே பார்ட் டைம் பவுலராகவும் செயல்படுவார். டாப் ஆர்டரில் ரெய்னாவை போன்று ஆடி, பவுலிங்கும் செய்யக்கூடிய தரமான வீரராக இவர் இருப்பார் என்பதால் இவரை வாங்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications