நாட்டிங்ஹம் : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க பேட்ஸ்மேனாக இருந்த முரளி விஜய் இங்கிலாந்து டேட்ஸ் தொடரில் சரியாக ஆடாத காரணத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
எனினும், இங்கிலாந்து கவுன்டி அணியான எசக்ஸ் அணியில் இணைந்து ஆட முடிவு செய்தார். சென்ற வாரம் இது தொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், நேற்று அவர் கவுன்டி போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அதில், எசக்ஸ் அணி, நாட்டிங்ஹம் அணிக்கு எதிராக ஆடியது. அதில் எசக்ஸ் அணிக்காக அரைசதம் அடித்துள்ளார் முரளி விஜய். இதன் மூலம், தன்னை அணியில் எடுக்காமல் விட்டது தவறு என பேட்டால் பதில் கூறியுள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் நாட்டிங்ஹம் அணி முதலில் ஆடியது. 58.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய எசக்ஸ் அணிக்கு முரளி விஜய், நிக் பிரவுன் இணை 56 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் அளித்தது.
அடுத்து எசக்ஸ் அணியின் வீரர்கள் விக்கெட்களை வேகமாக இழந்து வந்தாலும், முரளி விஜய் களத்தில் நின்று 56 ரன்கள் அடித்தார். அதில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும்.
மற்றொரு, கவுன்டி போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் டர்ஹம் அணிக்காக ஆடி ஒன்பது விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். ஒரே இன்னிங்க்ஸில் 7 விக்கெட்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.