புனே: சர்வதேசப் போட்டியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனியை அடிச்சிக்க ஆளே கிடையாது. ஐபிஎல்லில் நேற்று நாளில் ரெண்டு சாதனைகளைப் புரிந்தார்.
ஐபிஎல்லில் நேற்று இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அபாரமாக விளையாடி வென்றது.
ஏதோ மஞ்சள் பெயிண்டை அடித்தது போல், மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் குவிந்திருந்தனர். சிஎஸ்கே பேட்டிங் செய்யத் துவங்கியதும், முதல் பாலில் இருந்தே தோனி, தோனி என்று தோனியை மைதானத்துக்கு வரும்படி ரசிகர்கள் அழைத்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் வந்த தோனி, ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்தார். வழக்கம்போல் சிக்சர் அடித்து, கிரேட் பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
இந்த ஆட்டத்தின்போது, ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக 4,000 ரன்களைக் கடந்தார் தோனி. 173 ஆட்டங்களில், 4007 ரன்களை அவர் எடுத்துள்ளார்.
முன்னதாக விக்கெட் கீப்பராக டி-20 போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்தோர் பட்டியலில் 144 கேட்ச்களுடன் முதலிடத்தைப் பிடித்தார் தல தோனி. இலங்கையின் குமார் சங்கக்காரா 142 கேட்ச்களை பிடித்திருந்தார். தினேஷ் கார்த்திக் 139 கேட்ச்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
இந்தாண்டு துவக்கத்தில், 600 சர்வதேச கேட்ச்களை பிடித்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி புரிந்திருந்தார்.