கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அந்த அமைப்பின் செயலாளர் அனுராக் தாகூர் பதிலளித்தார்.
ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அனுராக் தாகூர், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அனுராக் தாகூர் அளித்த பேட்டி:
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பிளெட்சர் பணிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அப்பதவிக்கான புதிய நபர் பற்றி மீடியாக்கள் ஊக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதில் சவுரவ் கங்குலியை கோச்சாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
கங்குலி ஒரு சிறந்த வீரர். இந்திய அணிக்கு அவரது பங்களிப்பு அபாரமானது. இருப்பினும், இந்திய அணிக்கு யாரை கோச்சாக நியமிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவை சந்தித்த பிறகு அதுகுறித்து முடிவெடுக்கபடும்.
வங்கதேச சுற்றுப் பயணத்தில் ஈடுபடும் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்சியாளர் மற்றும் உதவி பணியாளர்களை நியமிக்க வேண்டியது பாக்கியுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.
சுக்லா பேசுகையில், நடப்பு ஐபிஎல் சீசன் சர்ச்சைகளற்றதாக நிறைவுற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து ஊழியர்களின் உதவியால் இது சாத்தியப்பட்டது என்றார்.