லட்சக்கணக்கில் பாதிப்பு
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு ஆயிரக்கணக்கில் நிகழ்ந்துள்ளது. உலக அளவில் சாதாரண நிலையை மக்கள் இழந்துள்ளனர். அவர்களின் இயல்புவாழ்க்கை தற்போதைய சூழலில் கனவாகி உள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால், ஒருசிலருக்கு அடுத்த வேளை உணவும் கேள்விக்குறியாகி உள்ளது.
வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டு உலகம் ஸ்தம்பித்துள்ளது. ஓய்வின்றி அடுத்தடுத்த நாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், ஒரே இடத்தில் அவர்களின் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். ஒருசிலர் இதை என்ஜாய் செய்து போஸ்ட் செய்து வந்தாலும், எத்தனை நாட்களுக்கு அவர்களால் வீட்டிலேயே முடங்கியிருக்க முடியும் என்று கணிக்க முடியவில்லை.
சம்பள பிடித்தம்
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச வீரர்கள் மட்டுமின்றி உள்ளூரில் விளையாடும் வீரர்களும் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றால் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் தரமுடியும் இல்லையென்றால், சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டே வழங்கப்படும் என்று பல்வேறு நாடுகளில் கூறப்பட்டுள்ளது.
கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவிப்பு
ஐபிஎல்லுக்கும் இதேநிலைதான். பல்வேறு நாடுகளும் இந்த விஷயம் குறித்து பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என்று கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் ஏற்கனவே போடப்பட்டுள்ள நிலையில், சர்வதேச மற்றும் அணிகளின் வீரர்களின் சம்பளம் தற்போதைக்கு குறைக்கப்படாது என்று அதன் சிஇஓ ஜாக்குவஸ் பால் கூறியுள்ளார்.
சம்பள பிடித்தம் குறித்து ஆலோசனை
ஆனால் அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாவிட்டால், அப்போது, சம்பள பிடித்தம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி அடுத்ததாக வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.