பெரும் சாதனை
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் அவர் உண்மையில் பதக்கம் வெல்வார் என்று பெரிதாக எவரும் எதிர்பார்க்கவில்லை. பிவி சிந்து உட்பட சில நட்சத்திர போட்டியாளர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அனைவரையும் ஓரம்கட்டி தங்கமே வென்று அசத்திவிட்டார். ஒரு மாதத்துக்கு முன்பு வரை, இந்திய ஈட்டி எறிதல் விளையாட்டு வீரர்களுக்கும், சில வடமாநில ரசிகர்களுக்கும் தெரிந்த நீரஜ் சோப்ரா எனும் பெயர், இன்று உலகத்தின் பெரும்பாலானோருக்கு ரீச் ஆகிவிட்டது. ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
மாறிய வாழ்க்கை
அந்த ஒரே நாளில், நீரஜ் வாழ்க்கையே மாறிவிட்டது எனலாம். எனலாம்-லா கிடையாது, மாறிடுச்சு.. அவ்வளவுதான். அவரது தங்கப் பதக்கம் மூலம் பணப் பரிசுகள் மற்றும் வரவேற்புகள் மட்டுமின்றி, இலாபகரமான பிராண்ட் அம்பாசிடர் ஒப்பந்தங்களும் கைக்கூடியுள்ளன. இதற்காக கோடிக்கணக்கில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த கோடிக்கணக்கான ஒப்பந்தங்கள் இப்போது நீரஜ் சோப்ராவுக்கும் கிடைத்துள்ளன.
கோடிக்கணக்கில்
"ஒலிம்பிக்கிற்கு முன் நீரஜின் ஒப்பந்தங்கள் ரூ. 20-30 லட்சம் வரை இருந்தது. ஆனால் இப்போது தங்கம் வென்றுள்ளதால், ஒப்பந்தங்களின் காஸ்ட் உயரும். மேலும் அவருடைய புகழ் இப்போது உச்சத்தில் இருப்பதால் ரூ. 3 கோடியை எட்டும். நீரஜுடன் பல நிறுவனங்கள் கைகோர்க்க ஆர்வமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று நீரஜின் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றிய மார்க்கெட்டிங் நிபுணர் நமது மைக்கேலிடம் கூறினார்.
உலகின் நம்பர்.2
இந்நிலையில், தரவரிசையிலும் நீரஜ் சோப்ரா தாறுமாறாக எகிறியுள்ளார். ஆம்! ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதலில் 14 இடங்கள் முன்னேறி 2-வது இடத்துக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார். உலகத் தரவரிசையில் ஜெர்மன் வீரர் ஜோஹன்னாஸ் வெட்டர் 1,396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நீரஜ் சோப்ரா 1,315 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இதுகுறித்து உலக தடகள இணையதளத்தில், "ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக, நீரஜ் சோப்ராவுக்கு அதிகமான ஃபாலோயர்ஸ் இருந்தனர். ஆனால், ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய சார்பில் தடகளத்தில் முதன்முதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபின், அவரின் புரஃபைல் உச்சத்துக்குச் சென்றுவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதனை
ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக, இன்ஸ்டாகிராமில் நீர்ஜ் சோப்ராவுக்கு 1.43 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தனர். ஆனால், தங்கம் வென்றபின் அவர் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 32 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகளவில் டிராக் ஃபீல்ட் தடகளவீரர்களில் அதிக அளவு ஃபாலோயர்ஸ் கொண்ட அத்லெட் எனும் பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுவிட்டார். தற்போது, இந்தியாவை பொறுத்தவரை விராட் கோலி, எம்எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் விளம்பர நிறுவனங்களின் முக்கிய இலக்குகளாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல், ஆர் அஸ்வின், பிவி சிந்து மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் உள்ளனர். விரைவில் நீரஜும் அந்த வரிசையில் சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெளரவம்
தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா அரசு ரூ .6 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது. தவிர குரூப் 1 வேலையும் அறிவித்துள்ளது. பஞ்சாப் அரசு 2 கோடி அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக இருக்கும் BYJU's நிறுவனமும் அதே தொகையை அறிவித்துள்ளது. நாம் முன்பே சொன்னது போல் மணிப்பூர் அரசு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐபிஎல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஆகியவை தலா 1 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளன. இண்டிகோ ஏர்லைன்ஸ் நீரஜுக்கு 1 வருட காலத்திற்கு இலவச விமான பயண ஆஃபர் கொடுத்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நீரஜிற்கு XUV 700 வாகனத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார், இதன் விலை சுமார் 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.