ட்ரினிடாட் :மேற்கிந்திய தீவுகளின் வீரர் கெமூ பாலை பேட்டால் தாக்க முற்பட்ட பாகிஸ்தான் வீரரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஜமய்க்கா தாலவாஸ் அணி வீரர் ஆசிப் அலி மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜமய்க்கா தாலவாஸ் மற்றும் குயானா அமேசான் வாரியர்ஸ் இடையிலான போட்டியின்போது அவுட்டான ஆசிப் அலி குறித்து கெமூ பால் விமர்சித்து பேசியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமய்க்கா தாலவாஸ் மற்றும் குயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் குயானா அமேசான் வாரியர்ஸ் முதலில் பேட் செய்து 113 ரன்களை மட்டுமே அடித்தது. அவர்களை சிறப்பான பௌலிங்கால் வீழ்த்திய தாலவாஸ் அணியினர் சேசிங்கில் இரண்டு ஓவர்கள் கைவசம் இருந்த நிலையில் வெற்றி பெற்றனர்.
இந்த போட்டியின்போது தாலவாஸ் அணிக்காக களமிறங்கிய பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி, 3வது பந்திலேயே டக் அவுட் ஆனார். கெமூ பாலின் சிறப்பான பௌலிங்கில் கிறிஸ் கிரீன் கேட்சில் அவர் அவுட்டானார். இதையடுத்து அவர் மைதானத்தைவிட்டு வெளியேறியபோது கெமூ அவர்குறித்து விமர்சித்து சில வார்த்தைகளை பேசியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ஆசிப் அலி, அவரது முகத்தில் பேட்டால் தாக்க முற்பட்டுள்ளார். இதையடுத்து ஆசிப் அலி மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.