யார் இந்த சுதிர் குமார்
இந்திய அணி மற்றும் சச்சினின் சிறப்பு ரசிகராக அறியப்படும் சுதிர் குமாரை பார்க்காத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை என சொல்லிவிடலாம். இவர் இந்தியா ஆடும் போட்டிகளில் உடல் முழுவதும் இந்திய தேசிய கொடியை வரைந்து கொண்டு, சச்சினின் உடையில் இருக்கும் "10 டெண்டுல்கர்" என்ற அடையாளத்தோடு வலம் வருவார். அதே போல, பாகிஸ்தான் அணியின் பெரும்பாலான போட்டிகளில் இடம் பிடித்து விடுவார் அந்த நாட்டு ரசிகரான முஹம்மத் பஷீர். இவர்கள் இருவரும் 2011 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்ற போது அறிமுகமாகினர். அப்போது முதல் இருவரும் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் ஒன்றாக வலம் வந்தனர்.
ஸ்பான்சர் செய்த பஷீர்
சுதிர் குமார் இவர் பீகாரை சேர்ந்தவர். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் இவருக்கு, சச்சின் தான் கிரிக்கெட் போட்டிகளை காண ஸ்பான்சர் செய்து வருகிறார். எனினும், சச்சின் வெளிநாட்டில் இருந்ததால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இவருக்கு ஸ்பான்சர் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பஷீர் இவரிடம் ஆசிய கோப்பைக்கு வருவது பற்றி இவரிடம் விசாரித்துள்ளார். சுதிர் தனக்கு ஸ்பான்சர் கிடைக்காத சோகத்தை அவரிடம் பகிர்ந்துள்ளார். அதை கேட்ட பஷீர், உடனடியாக இவருக்கு டிக்கெட் செலவு மற்றும் தங்கும் செலவை ஏற்று சுதிரை துபாய்க்கு வரவைத்துள்ளார்.
உதவ நினைத்த பஷீர்
முஹம்மத் பஷீர் பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். தற்போது, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். தான் பெரிய பணக்காரன் இல்லை என்றாலும், சுதிருக்கு உதவ வேண்டும் என நான் நினைத்தேன் என கூறியுள்ளார் பஷீர்.
தோனி, ரோஹித்துடன் சந்திப்பு
பஷீர் தோனியின் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர்கள் இருக்கும் அதே அறையில் தான் இவர்கள் இருவரும் தங்கியுள்ளனர். இதை அடுத்து இந்திய வீரர்கள் தோனி, கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சிறிது நேரம் செலவிட்டுள்ளனர். தோனி பஷிருக்கு இறுதி போட்டிக்கான இலவச டிக்கெட்டை வழங்கி உள்ளார்.