யார் கேப்டன்
இந்த அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர்களான ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் கேப்டன் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்தது. ஏனென்றால் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்கலாம் என்றும் பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. ரசிகர்களும் பாண்ட்யா கேப்டனாக வருவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இறுதியில் ஷிகர் தவான் கேப்டன்ஷிப் ரேசில் வெற்றி பெற்றார்.
முன்னாள் வீரர் வருத்தம்
இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த முடிவுக்கு முன்னாள் இந்திய வீரரும், ஹர்திக் பாண்ட்யாவின் சிறுவயது பயிற்சியாளருமான ஜிதேந்தரா சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இலங்கை தொடரில் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்திருக்கலாம். அது நடக்காதது வருத்தம் அளிக்கிறது. பாண்ட்யாவால் இன்னும் 7 ஆண்டுகள் வரைக்கும் கூட இந்திய அணிக்காக விளையாட முடியும். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளது. கிரிக்கெட்டின் நுட்பமும், பொறுமையும், களங்களை பற்றிய ஆற்றலும் அவருக்கு உண்டு.
கேப்டனாக தகுதியானவர்
இந்தியாவுக்காக அனைத்து வடிவ கிரிக்கெட் பார்மெட்களிலும் ஹர்திக் பாண்ட்யா விளையாடி இருக்கிறார். அதனால் அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரை பொறுத்தவரை மைதானத்தின் தன்மை, சீதோஷனம் எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. அவரிடம் அனைத்து சூழல்களையும் கையாளும் திறன் இருக்கிறது. மேலும் தன்னுடைய பவுலிங்கை தற்போது மிகவும் சீரியசாக எடுத்து கொண்டு தயார் படுத்தி வருகிறார் என்றுக்கூறியுள்ளார்.
இலங்கை தொடர்
இந்த இலங்கை தொடரானது ஹர்திக் பாண்ட்யாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பந்துவீசுவதில் அவருக்கு இருந்த சிரமம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டு வருகிறார். எனவே இலங்கை தொடரில் மீண்டும் ஆல்ரவுண்டர் அதிரடியை அவர் காட்டினால், நிச்சயம் டி20 உலகக்கோப்பை தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.