ஒரு போட்டிக்கு ரூ.2.42 கோடி.. இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரானது 'பேடிஎம்'!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு, அடுத்த நான்கு ஆண்டுகள் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் (One97 Communications) நிறுவனமே ஸ்பான்சராக செயல்பட உள்ளது. இது, இணையதள பேமென்ட் போர்ட்டலான 'பேடிஎம்' நிறுவனத்தினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2014-15ம் ஆண்டுக்கான ஸ்பான்சராக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒரு போட்டிக்கு ரூ.40 லட்சத்தை கட்டணமாக பிசிசிஐக்கு, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செலுத்தி வந்தது.

இதனிடையே அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஸ்பான்சரை தேர்ந்தெடுக்க இன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டது. இதில் ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் மற்றும், மைக்ரோமேக்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்தான் பங்கேற்றன.
5 மணி நேரங்கள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஒப்பந்த புள்ளி திறக்கப்பட்டது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பிசிசிஐ கேட்ட ஆவணங்களை முழுமையாக அளிக்கவில்லை என்பதால் அதன் ஒப்பந்த புள்ளி திறந்து பார்க்கப்படவில்லை. இதனால் ஒன்97 நிறுவனத்தின் ஒப்பந்தமே இறுதி செய்யப்பட்டது.
2019ம் ஆண்டுவரை பிசிசிஐ ஸ்பான்சராக ஒன்97 நிறுவனம் செயல்படும். டெஸ்ட், ஒன்டே, டி20 போன்ற அனைத்து வகை போட்டிகளுக்கும் ஸ்பான்சர்ஷிப் பொருந்தும். போட்டியொன்றுக்கு, 2.42 கோடி ரூபாயை கட்டணமாக பிசிசிஐக்கு, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வழங்க சம்மதித்துள்ளது.
ரஞ்சி டிராபி இனிமேல் 'பேடிஎம் ரஞ்சி கோப்பை' என்று அழைக்கப்படும்.


Click it and Unblock the Notifications