மெல்போர்னில் 2வது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நாளை மெல்போர்னில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. முதலில் இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இடம்பெறாத வீரர்கள்
நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வார்னர் உள்ளிட்ட சில வீரர்கள் இடம்பெறவில்லை. இதேபோன்று இந்திய அணியிலும் கேப்டன் விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை.
கில், சிராஜ் இடம்பிடிப்பு
துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையில் நடைபெறவுள்ள நாளைய போட்டியில் துவக்க வீரர் பிரித்வி ஷா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கவுள்ளார். இதேபோல பௌலர் முகமது சிராஜ் நாளைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சவால்
இந்த போட்டியில் மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விஹாரி, ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பராக பந்த் செயல்பட உள்ளார். மொத்தத்தில் முக்கிய வீரர்கள் இல்லாத இந்த அணிக்கு ஆஸ்திரேலிய அணி சவால் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.