வெற்றிக்கு காரணமான புஜாரா
கடந்த 2018-19ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோப்பையை வென்றது இந்திய அணி. இந்த தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு சத்தீஸ்வர் புஜாரா முக்கிய காரணமாக இருந்தார். இந்த தொடரில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவை 2க்கு 1 என்ற கணக்கில் அவர்களது மண்ணில் இந்தியா வெற்றி கொண்ட நிலையில், தொடரில் மொத்தமாக 521 ரன்களை குவித்திருந்தார் புஜாரா.
2க்கு 1 கணக்கில் இந்தியா வெற்றி
இதனிடையே, சோனியின் டென் பிட்ஸ்டாப் நிகழ்ச்சியின் பேஸ்புக் லைவ் சாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற புஜாரா, இந்த சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுப்பயணத்தில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மோதியது.
பார்ட்னர்ஷிப்பில் அசத்தல்
இந்த தொடரின் போட்டியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்களே இந்தியா எடுத்திருந்த நிலையில், களமிறங்கி ரோகித் சர்மா, ஆர் அஸ்வின் உள்ளிட்டவர்களுடன் அடுத்தடுத்து பார்ட்னர்ஷிப் வைத்து புஜாரா 123 ரன்களை குவித்தார். இதன்மூலம் அந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
மனவலிமைக்கு முக்கியத்துவம்
இந்நிலையில் ஒவ்வொரு தொடருக்கு முன்பும் தன்னை சிறப்பாக தயார் படுத்திக் கொள்வதாகவும் அதுவே தனக்கு மிகவும் முக்கியம் என்றும் சத்தீஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். முதலில் மனவலிமைக்கே தான் முக்கியத்துவம் தருவதாகவும் அதன்பின்பே உடல்வலிமை உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பௌலிங்கை கண்காணித்தேன்
கடந்த 2014 -15ல் ஆஸ்திரேலியாவில் தான் விளையாடியபொழுது அவர்களது பௌலிங் அட்டாக் உள்ளிட்டவை குறித்து கண்காணித்ததாகவும், இதையடுத்து அவர்களின் பௌலிங் குறித்த ஐடியா தனக்கு ஏற்பட்டதாகவும், இதனால்தான் 2018 -19 தொடரில் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டதாகவும் புஜாரா மேலும் கூறினார்.