
புனே:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக மாறிய புனேயில் இந்த ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. அதன்பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த காரியம் தான், தற்போதும் பரவலாக பேசப்படுகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போட்டி நடக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தாவுக்கு இடையேயான ஆட்டம் மட்டுமே சேப்பாக்கத்தில் நடந்தது.
காவிரி போராட்டம் காரணமாக, சிஎஸ்கே போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. அதையடுத்து சிஎஸ்கே பங்கேற்ற 6 ஆட்டங்கள் அங்கு நடந்தன. அதில், 5ல் சிஸ்கே வென்றது.
சேப்பாக்கமான புனே
வழக்கமாக ஒரு புதிய மைதானத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ப அணியை தயார் செய்வர். சேப்பாக்கம் மைதானத்துக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்திருந்த நிலையில், புனே புதிய சொந்த மைதானமாக மாறியது. அந்த நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனியின் விருப்பப்படி, சேப்பாக்கத்துக்கு நிகராக புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் மாற்றப்பட்டது.
தோனி கொடுத்த அதிர்ச்சி
பஞ்சாப் அணியுடன் அந்த மைதானத்தில் இந்த சீசனில் கடைசி லீக் ஆட்டம் முடிந்தது. தோனியின் விருப்பப்படி, மைதானத்தை தயார் செய்த ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் தலா, ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், அவர்கள் தோனியுடன் எடுத்துக் கொண்ட படமும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. தோனியின் பெருந்தன்மை, எவரையும் மறக்காத குணத்தால், கண்ணில் தண்ணீரோடு ஆனந்த அதிர்ச்சியில் புனே மைதான ஊழியர்கள் உள்ளனர்.
