4 மணி நேர போராட்டம்
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆக.12ம் தேதி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்து. இந்தியா தரப்பில் லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், புஜாராவும், ரஹானேவும் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக கைக் கொடுத்தனர். 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி நேரத்தை அன்றைய தினம் இந்தியா கடக்க உதவினர். எனினும், அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா களத்தில் இருந்தனர்.
இந்தியா தாக்குதல்
பிறகு நேற்று (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். ரிஷப் பண்ட் அவுட்டான உடனேயே, இந்தியாவின் கதை முடிந்தது என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்ப்பாட்டமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது இந்திய அணி.
ஆக்ரோஷ இந்தியா
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா பிரம்மித்து சிலாகித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில், "லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 7-8 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய டிரா செய்திருந்தாலும், அது இந்தியாவின் தார்மீக வெற்றியாக இருந்திருக்கும். ஆனால் இந்த தோல்வியைத் தொடர்ந்து, மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி மீண்டு எழுந்து வருவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் இந்த போட்டியை டிரா செய்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா அணி அவர்களின் ஆக்ரோஷத்தால் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டது. மேலும் இங்கிலாந்து மீண்டு வருவதற்காக சாத்தியக்கூறுகையும் சுக்குநூறாக்கிவிட்டது. இந்தியாவின் அபாரமான பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து தங்கள் இயல்பான விளையாட்டை விளையாடவில்லை.
தரைமட்டம்
சாத்தியமற்ற சூழ்நிலையை சாத்தியமாக்கும் பசியுடன் இந்தியா காணப்பட்டது. ஷமியின் எதிர் தாக்குதல் இங்கிலாந்தை தரைமட்டமாக்கியது. இந்தியாவின் பந்துவீச்சிலும் அதே போராட்ட உணர்வை கண்டேன். இங்கிலாந்தின் பலவீனமான பேட்டிங்கிற்கு பிரஷர் கொடுத்து வீழ்த்தலாம் என்பதை இந்திய வீரர்கள் நன்கு உணர்ந்து வைத்துள்ளனர்" என்று ரமீஸ் ராஜா தெரிவித்தார்.