விதர்பா முதல் இன்னிங்க்ஸ்
இந்திய அளவில் நடைபெறும் முக்கிய முதல் தர போட்டித் தொடரான ரஞ்சி ட்ராபி தொடரின் இறுதிப் போட்டியில் விதர்பா - சௌராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்க்ஸில் 312 ரன்கள் குவித்தது. கார்னேவார் 73 ரன்கள் குவித்தார்.
சௌராஷ்டிரா முதல் இன்னிங்க்ஸ்
அடுத்து சௌராஷ்டிரா தன் முதல் இன்னிங்க்ஸ் 307 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் ஆர்டரில் ஸ்நெல் சுக்தேவ் பட்டேல் (102 ரன்கள்) சதம் அடித்தார். மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கை விட்ட நிலையில், கடைசி ஐந்து வீரர்களும் 20+ ரன்கள் அடித்தனர். ஜெயதேவ் உனட்கட் 46 ரன்கள் அடித்தார். விதர்பா அணியின் பந்துவீச்சாளர் ஆதித்யா சர்வாதே 5 விக்கெட்களும், வாக்காரே 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.
விதர்பா இரண்டாம் இன்னிங்க்ஸ்
அடுத்து விதர்பா அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஆதித்யா சர்வாதே கடைசி நேரத்தில் அடித்த 49 ரன்கள் அந்த அணி 200 ரன்களை எட்ட பெரிதும் உதவியது. நான்காம் நாளில் நாக்பூர் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி இருந்ததால், 206 ரன்கள் இலக்கை சௌராஷ்டிரா எட்டுவது கடினம் என கூறப்பட்டது.
விதர்பா வெற்றி
புஜாரா கை கொடுத்தால் சௌராஷ்டிரா வெற்றி பெறலாம் என்ற நிலையில், புஜாரா டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அந்த அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஆதித்யா சர்வாதே இரண்டாம் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
ஆதித்யா சர்வாதே அசத்தல்
சௌராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய விதர்பா அணி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரஞ்சி தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. அந்த அணியின் ஆதித்யா சர்வாதே இறுதிப் போட்டியில் பந்துவீச்சில் 11 விக்கெட்களும், பேட்டிங்கில் முக்கிய கட்டத்தில் 49 ரன்களும் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.