என்னிடம் 'பெருஸ்ஸா' எதிர்பார்க்காதீங்க... "டைரக்டர்" ரவி சாஸ்திரி!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி ரொம்ப உஷார் பார்ட்டியாக இருக்கிறார். தன்னிடமோ அல்லது இந்திய அணியிடமோ பெரிய அளவில் மாயாஜாலம் எதையும் யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்று இப்போதே சேப்டிக்காக சொல்லி வைத்து விட்டார்.
ஆகஸ்ட் 25ம் தேதி இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் சாஸ்திரி.
அவரை வாழ்த்தியுள்ள சுனில் கவாஸ்கர், அதற்காக சாஸ்திரியிடம் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் என்று ஏற்கனவே சாஸ்திரியையும் சேர்த்து உஷார்படுத்தியுள்ளார். இந்த நிலையில் சாஸ்திரியே அதைக் கூறியுள்ளார்.

சொல்லித் தர போகலைப்பா
இதுகுறித்து சாஸ்திரி கூறுகையில், நான் இந்திய அணிக்கு பாடம் நடத்தப் போகவில்லை. மாறாக உண்மையைக் கண்டறியும் நோக்கத்துடன் போவதாகத்தான் கொள்ள வேண்டும்.

பிளட்சருடன் பேசுவேன்
நான் பயிற்சியாளர் டங்கன் பிளட்சருடன் பேசி, அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயற்சிப்பேன்.

லார்ட்ஸ் வெற்றி என்னாச்சு
லார்ட்ஸ் மைதானத்தில் நாம் மிகப் பிரமாதமான வெற்றியைப் பெற்றோம். ஆனால் அதற்கு அடுத்த 3 போட்டிகளில் மிக மோசமாக தோற்றுள்ளோம். இதற்கான காரணத்தை நான் ஆராய வேண்டியுள்ளது.

தப்பு என்ன
இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் போலவே நானும் என்ன தவறு நடந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளேன். அதைச் சரி செய்ய முயற்சிப்பேன்.

எதிர்காலம் எப்படியோ
பிளட்சருக்கு அடுத்து நீங்கள்தான் பயிற்சியாளரா என்று கேட்டால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எதிர்காலத்தை என்னால் இப்போதே கூற முடியாது. அதைப் பற்றி நான் நினைக்கவும் இல்லை. இப்போது நிலைமை சரியில்லை. அதை சரி செய்ய வேண்டியதுதான் முக்கியமானது.

முதல் வேலை ரிப்போர்ட் செய்ய வேண்டியது
என்னுடைய முதல் வேலை நடந்தது என்ன என்பதை ஆராய்ந்து கிரிக்கெட் வாரியத்திடம் அறிக்கை கொடுப்பதுதான். அதைப் பற்றி மட்டுமே இப்போது நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

15 நாளில் ஒன்றும்....
அடுத்த 15 நாட்களுக்குள் இந்திய அணியில் மிகப் பெரிய மாயாஜாலம் நடந்து விடும். நான் அதைச் செய்வேன், அணி அதைச் செய்யும் என்று தயவு செய்து யாரும் எண்ண வேண்டாம். அது நடக்கவும் சாத்தியமில்லை. சிறப்பான தொடராக வருகிற ஒரு நாள் தொடர் அமையும் என்று அனைவரையும் போல நீங்களும் நம்புங்கள் என்றார் சாஸ்திரி.


Click it and Unblock the Notifications