“200 மடங்கு வேதனை அதிகம் எனக்கு”.. குவியும் விமர்சனம்.. வீரர்களின் நிலைமை குறித்து அஸ்வின் பேச்சு!
சென்னை: இந்திய அணி மீதான விமர்சனங்கள் குறித்து சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று நம்பிக்கை தந்தது. ஆனால் எல்லாம் போச்சு என்பது போல அரையிறுதி சுற்றில் படு மோசமாக தோற்று வெளியேறியது.
இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இந்திய அணி வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. மேலும் அணியில் மாற்றம் வேண்டும் எனவும் கோரப்பட்டு வருகின்றன.

அஸ்வினின் விளக்கம்
இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். அதில், இந்திய அணி இறுதிப்போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதனை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக நாங்கள் எந்த காரணத்தையும் கூறவே முடியாது. ஆனால் இதில் இருந்து நாம் கடந்து செல்ல வேண்டுமல்லவா??

கடும் வேதனை
இதனை ஒரு மோசமான தொடராக நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் அரையிறுதியில் தான் தோற்றுள்ளோம். அரையிறுதி சுற்று, இறுதி சுற்றுகளுக்கு செல்வதையே சாதனையாக பார்க்கலாம். எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் என்று கூறலாம். ரசிகர்களாகிய உங்களை விட, அணியில் விளையாடிய எங்களுக்கு 200 - 300 மடங்கு அதிகமாக வேதனை உள்ளது என அஸ்வின் கூறியுள்ளார்.

பிசிசிஐ-ன் நடவடிக்கை
இது ஒருபுறம் இருக்க, பிசிசிஐ தனது நடவடிக்கையை தொடங்கிவிட்டது. இந்திய கிரிக்கெட்டின் தேர்வுக்குழு மொத்தத்தையும் நீக்கி அதிரடி உத்தரவை போட்டுள்ளது. சேட்டன் சர்மா தலைமையிலான அனைவருமே பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் புதிய குழுவை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

கேப்டன்சி மாற்றம்
அடுத்தக்கட்ட நவடிக்கையாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மாற்றம் நடைபெறுகிறது. அதாவது ரோகித் சர்மா டி20 அணியில் இருந்து விலகி ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார். இதே போல ராகுல் டிராவிட்டையும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கொடுத்துவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications