மீண்டும் வந்தார்
பின்பு அடுத்த வருடமே ஐபிஎல் ஆரம்பிக்க செயல் திட்டங்கள் தீட்டும் வேளையில் ஐசிஎல் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாண்டுகள் தடை என்று அறிவித்தது. 2010ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ராயுடுவை தேர்ந்தெடுத்தாலும், அவரது திறமையை முழுதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. தோனி, கோஹ்லியின் தலைமையில் தேசிய அணிக்கு அவ்வப்போது விளையாடினாலும் ஒரு அசாதாரண சூழலில் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள் ராயுடுவுக்கு அமையவே இல்லை. தினேஷ் கார்த்திக்கை போலவே கடைசி வரை, "அருமையான பிளேயர், ஆனால் பெரிதாக சாதிக்கவில்லை..." என்கிற பேச்சோடு வாழ்க்கை முடிந்துவிடுமோ என்கிற நிலையில், ஐபிஎல்லில் ராயுடுவின் பெயர் ஏலத்தில் வந்தது.
ஆச்சரியப்படுத்திய மாற்றம்
இரண்டு கோடியே இருபது லட்சத்திற்கு ராயுடுவை சென்னை எடுத்தப்போது, புருவங்கள் உயர்ந்தன. மும்பைக்கு பல்வேறு இக்கட்டான சூழலில் ராயுடு சில ரன்களை குவித்திருந்தாலும், அவரது ஆட்டிட்யூட் சென்னைக்கு செட் ஆகுமா என்பதே முதல் கேள்வி. ஹர்பஜனுடன் சண்டை, மைதானத்திலேயே கத்துவது, எப்போதும் ஏதோ ஒரு சண்டைக்கு தயாராக இருப்பது என ராயுடுவின் பேட்டிங் எவ்வளவு ப்ளஸ்கள் நிறைந்ததோ, அதை விட நிறைய மைனஸ் அவரிடம் இருந்தது. ஐபிஎல் தொடங்குவதற்கு இருபது நாட்கள் முன்பாகவே சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் குழுமி பயிற்சியில் ஈடுபட, ராயுடுவுடன் தோனி சேர்ந்து வகுக்கும் வியூகங்கள் புகைப்படங்களாக வெளிவரும்போதே ஏதோ ஸ்பெஷலாக இருக்கப்போகிறது என்று தோன்றியது.
மீண்டும் இந்திய அணியில்
இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே ராயுடு தன்னை வளர்த்த அணியுடன் மோத, வாட்சனுடன் ராயுடு துவக்க வீரராக களமிறங்கினார். வருகிற செப்டம்பர் மாதத்தில் 33 வயதில் அடியெடுத்து வைக்கும் ராயுடுவிற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு அப்புறம் நல்ல நேரம் துவங்கியிருக்கிறது. மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ், கேதார் ஜாதவ் போன்றவர்களிடம் தன்னுடைய இடத்தை இழந்து போராடிய ராயுடு மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார்.
கேப்டனின் பாராட்டு
"ராயுடுவின் பேட்டிங் மீது நான் எப்போதும் பெரு மதிப்பு வைத்திருந்தேன். ஐபிஎல் தொடங்கும் முன்பே அவரை துவக்க வீரராக அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்து விட்டேன்..." என தோனி கடந்த போட்டியின் இறுதியில் குறிப்பிட்டார். 2014ல் அப்போதைய மைதானத்தின் அல்லது போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப தோனி அந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், யாரிடமிருந்து ஸ்டிரைக் கிடைக்காமல் நொந்து போய் பெவிலியன் திரும்பினாரோ அவரது வாயாலேயே சிறந்த வீரர் என்கிற அங்கீகாரம் கிடைக்கும் வரை போராடிய ராயுடுவின் வரலாறு எல்லோருக்கும் ஒரு பாடம்.