ஆவேஷ் கான் பந்துவீச்சு
வெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா சிறப்பான வெற்றிகளை பெற்ற போதும், பவுலிங்கில் பெரும் அடியை வாங்கி வருகிறது. இதற்கு காரணம் இளம் வீரர் ஆவேஷ் கான் தான். 2வது டி20 போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர், 2.2 ஓவர்கள் மட்டுமே வீசி 31 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்த போது, புவனேஷ்வர் குமாரை புறகணித்துவிட்டு ஆவேஷ் கானிடம் ரோகித் பந்தை கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
3வது டி20
2வது டி20 போட்டியில் தோல்வியடைந்த போதும் ஆவேஷ் கானுக்கு ஆதரவாக ரோகித் சர்மா நின்றார். மேலும் 3வது டி20 போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. ஆனால் நேற்றைய போட்டியில் மேலும் ஒருபடி மேல் சென்று, தாராள பிரபுவாக ரன்களை விட்டுக்கொடுத்தார்.
மோசமான ரெக்கார்ட்
நேற்றைய போட்டியில் வெறும் 3 ஓவர்களை மட்டுமே வீசி 47 ரன்களை விட்டுக்கொடுத்தார். பதிலுக்கு ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக எகானமி வைத்த வீரர் என்ற மோசமான நிலைக்கு சென்றுள்ளார். ஆவேஷ் கான் அவரின் எகானமி 15.70 ஆகும். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு முகமது ஷமி 15.33 ரன்கள் வைத்திருந்தார்.
விமர்சனங்கள்
இந்நிலையில் ஆவேஷ் கான் குறித்து இந்திய ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். ஒரு வீரரின் ஃபார்ம் சரியில்லை என்று தெரிந்தும் முக்கியமான போட்டியில் அவரை வைத்து ரிஸ்க் எடுப்பதா? எனக்கேள்வி எழுப்புகின்றனர். எனினும் ஆவேஷ் கானுக்கு ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் சிறப்பு ஆலோசனைகள் கொடுத்து வருவதால், நிச்சயம் அடுத்த போட்டியிலும் இருப்பார் எனத்தெரிகிறது.
என்ன ஸ்பெஷல் அப்படி?
இதுகுறித்து முன்பே பேசியிருந்த ரோகித் சர்மா, வாய்ப்புகள் கொடுத்து பார்த்தால் தான் இளம் வீரர்களின் திறமைகள் தெரியவரும் என வெளிப்படையாக கூறியிருந்தார். ஹர்திக் பாண்ட்யா போன்ற முன்னணி வீரர்களும், தொடக்கத்தில் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்திருந்தனர். அவர்களை போன்றே ஆவேஷ் கானையும் இந்தியாவின் எதிர்கால தூணாக மாற்ற ரோகித் முயற்சிக்கிறார் எனத் தெரிகிறது.